தமிழக கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்
கன்னியாகுமரி:தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி வந்த பெரியகருப்பன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரியது, சிறியது, வருவாய் தரக் கூடியது என்று மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்.
தற்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் 360 கோவில்களில் அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 180 கோவில்களில் இதைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை அளிப்பதற்காக கோவில் சுற்றுலாவை மேம்படுத்த இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டம் பரிசீலனையில் உள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் வேத பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சேர மொத்தம் 1300 பேர் விண்ணப்பித்தார்கள். அதில் 240 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச தங்குமிடம், ஆடை, உணவு ஆகியவை வழங்கப்பட்டு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
260 கோவில் தேர்களைப் பராமரித்து புதுப்பிக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 600 தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ரூ. 1 கோடியில் புதிய தங்கத் தேர் செய்யப்படும் என்றார் பெரியகருப்பன்.












Click it and Unblock the Notifications