ஞானதேசிகனுக்கு சீட்-கிருஷ்ணசாமி டென்ஷன்:தலைவர் பதவியை உதற முடிவு
டெல்லி:ராஜ்யசபா தேர்தலில் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவரான ஞானதேசிகனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டதால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகனே மீண்டும் போட்டியிடுவார் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த சீட்டுக்கு குறி வைத்து காத்திருந்த பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எப்படியாவது எம்.பி. ஆகி விட வேண்டும் என்று டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வந்தார் கிருஷ்ணசாமி. ஆனால் அதையும் மீறி வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவரான ஞானதேசிகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது கிருஷ்ணசாமிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அவர் டெல்லியில் உள்ள சில தமிழக தலைவர்களிடம் கூறியிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பொறுமையாக இருக்குமாறும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்கள் கிருஷ்ணசாமியை அமைதிப்படுத்தியுள்ளனராம்.
இதேபோல ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பும், ஞானதேசிகனுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் கடுப்பாகியுள்ளதாம். தொடர்ந்து வாசன் ஆதரவாளர்களுக்கே முக்கியப் பதவிகள், வாய்ப்புகள் அளிக்கப்படுவது சற்றும் நியாயமல்ல என்று அவர்கள் குமுறி வருகின்றனர்.
ஞானதேசிகன் விவகாரத்தால் தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக ஏதேனும் பூகம்பம் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications