கிருஷ்ணசாமிக்காக கூடிய ஐந்தே ஆதரவாளர்கள்!
கடலூர்:ராஜ்யசபா தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு டிக்கெட் தரப்படாததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வெறும் ஐந்து பேர் கடலூரில் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜ்யசபா தேர்தலில் டிக்கெட் வாங்கி விட தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக முயன்றார். இதற்காக டெல்லி சென்று அங்கேயே முகாமிட்டு முயற்சி செய்து வந்தார்.
ஆனால் அதையும் மீறி ஜி.கே.வாசன் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் கிருஷ்ணசாமி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக டெல்லி தலைவர்களிடம் கூறி வருகிறாராம்.
இந் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியின் மீது கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் கோபம் திரும்பியுள்ளது. அவர் தான் வாசனுக்கு ஆதரவாக செயல்பட்டு கிருஷ்ணசாமியின் வாய்ப்பை கெடுத்ததாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து இன்று கடலூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சீமாட்டி கார்னர் என்ற இடத்தில் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் கூடினர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்திரகோதண்டபாணி தலைமையில் கூடிய அந்தக் கூட்டத்தில் மொத்தமே 5 பேர் தான் இருந்தனர்.
அவர்கள் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். உடனடியாக போலீஸார் ஓடிவந்து அவர்களைக் கைது செய்து கொடும்பாவியை மீட்டனர்.












Click it and Unblock the Notifications