பிபிசியுடன் கைகோர்க்கும் ரேடியோ ஒன் எப்.எம்.
சென்னை:சென்னையின் முன்னணி எப்.எம். ரேடியோவான, ரேடியோ ஒன் நிறுவனத்துடன், பிபிசி நிறுவனம் கை கோர்த்துள்ளது. இதன் மூலம் பிபிசி வேர்ல்ட் நிகழ்ச்சிகள் ரேடியோ ஒன் மூலம் தமிழில் ஒலிபரப்பு செய்யப்படும்.
இந்த புதிய உடன்பாடு குறித்து பிபிசி ஆசிய பசிபிக் பிராந்திய வர்த்தகப் பிரிவு தலைவர் நீல் கர்ரி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிபிசி நிறுவனமும், ரேடியோ ஒன் நிறுவனமும் புதிதாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
அதன்படி, பிபிசி வேர்ல்ட் ஒளிபரப்பு செய்யும் விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரேடியோ ஒன் மூலம் தமிழில் ஒலிபரப்பு செய்யப்படும்.
இதேபோன்ற ஒப்பந்தம் ஏற்கனவே மும்பை மற்றும் டெல்லியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கிடைத்த வரவேற்பையடுத்து இப்போது தமிழிலும் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு குறித்த செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரேடியோ ஒன்னுக்கு வழங்கப்படும். அவை தமிழில் ரேடியோ ஒன் மூலம் ஒலிபரப்பாகும் என்றார்.
ரேடியோ ஒன் நிறுவன சென்னை நிலைய தலைவர் நவ்நீத் கூறுகையில்,
சென்னையின் முன்னணி ஆர்.ஜே.வான சுசித்ரா, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். நாளை முதல் இந்த புதிய நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் என்றார் நவ்நீத்.
சுசித்ரா முன்பு ரேடியோ மிர்ச்சியில் பணியாற்றினார். பின்னர் டிவிக்குத் தாவினார். தற்போது மீண்டும் எப்.எம்.முக்குத் திரும்புகிறார்.