விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்குஇலங்கை விமான நிலையத்தில் அடி, உதை
திருச்சி:கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.
விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.
ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.
அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.
ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.
வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.
இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications