பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை;உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை:பள்ளிகளில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கையில், தங்களது பள்ளி மாணவர்ளுக்கே பள்ளிக்கூடங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் சிபிஎஸ்இ பாட முறையில் பத்தாவது வகுப்பு படித்த மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களில் பத்தாவது வகுப்பில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் ஒன் வகுப்பில் இடம் தரப்படுவதில்லை என்றும் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள பிற பள்ளி மாணவர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் மெட்ரிகுலேஷன் பாட முறையில் பத்தாவது வகுப்பு படித்த முகம்மது ஆசிம் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், தான் பத்தாவது வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தனது பள்ளிக்கூடத்தில் பிளஸ் ஒன் வகுப்பில் அனுமதி கிடைக்கவில்லை. தனக்கு பிளஸ் ஒன் வகுப்பில் இடம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுக்கு இதுபோல பல புகார்கள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் நீதிமன்றமே நல்ல உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பத்தாவது வகுப்பை தங்களது பள்ளியில் முடித்த மாணவர்களுக்கு பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கையில் பள்ளிக்கூடங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது.
பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கக் கூடாது. எந்தவித தேர்வையும் நடத்தக் கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications