எனது எம்.எல்.ஏ.பதவியை பறிக்க முடியாது: ஜெ.
சென்னை:சட்டசபைத் தேர்தலில் நான் வேட்பு மனு தாக்கல் செய்தபோது எந்த விதி மீறலும் நடக்கவில்லை. எனது எம்.எல்.ஏ பதவியை யாராலும் பறிக்க முடியாது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி காணும் கனவு பலிக்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது, கோடநாடு எஸ்டேட் குறித்த தகவலைத் தெரிவிக்காமல் ஜெயலலிதா மறைத்து விட்டார். இதனால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படலாம், அவரால் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.
இதுகுறித்து ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டசபைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது நான் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை. எதையும் மறைக்கவில்லை. எனவே எனது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் வாய்ப்பே இல்லை. நான் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படலாம் என்ற கேள்விக்கும் இடம் இல்லை.
இதுதொடர்பாக கருணாநிதி காணும் கனவு பலிக்கப் போவதில்லை. எனவே கருணாநிதியின் பேச்சால் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும், எனக்கு வாக்களித்த ஆண்டிப்பட்டி வாக்காளர்களும் குழப்பமடையத் தேவையில்லை.
கோடநாடு எஸ்டேட் குறித்து கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இவற்றுக்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை. காரணம், இந்தக் கேள்விகளைக் கேட்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. உரியவர்கள் கேட்கும்போது இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பேன்.
கோடநாடு எஸ்டேட்டில் நான் மே மாதம் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தேன். அதை கருணாநிதி பெரும் பிரச்சினையாக்குகிறார். என் மீது அனைத்து வகையான குற்றச்சாட்டுக்களையும் அடுக்குகிறார்.
விசாரணை என்ற பெயரில், அரசு அதிகாரிகளையும், போலீஸாரையும் அனுப்பி அப்பாவி தேயிலைத் தோட்டத் தோழிலாளர்களை துன்புறுத்துகிறார். எஸ்டேட்டின் அன்றாடப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளார். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறுவதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications