தமிழர்கள் வெளியேற்றம்-உலக நாடுகள் கண்டனம்மன்னிப்பு கேட்டார் இலங்கை பிரதமர்
கொழும்பு:கொழும்பிலிருந்து தமிழர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தாங்கள் செய்தது மாபெரும் தவறு, அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், வருத்தம் தெரிவிப்பதாகவும் இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறி சமீபத்தில் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் நகரிலிருந்து வெளியேற்றி போர் நடந்து வரும் பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையில் கொழும்பு காவல்துறை ஈடுபட்டது.
இதற்கு ஐ.நா. சபை, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. தமிழர் இனத்தையே அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்தன. இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
மேலும், கொழும்பு காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கைக்கு இலங்கை உச்சநீதிமன்றமும் தடை விதித்தது. இதையடுத்து இலங்கை அரசு பணிந்தது. தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை மாபெரும் தவறு, அதற்காக வருத்தமும், மன்னிப்பும் கோருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் விக்கிரமாநாயகே கூறுகையில், அதிகாரிகள் செய்யும் நல்லது அரசுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். அதிகாரிகள் தவறு செய்தால் அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்.
கொழும்பு காவல்துறை அதிகாரிகள் செய்த தவறுக்கு நாங்கள் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை தவறானது. இதற்காக வருத்தமும், மன்னிப்பம் கேட்டுக் கொள்கிறோம்.
கொழும்பு தமிழர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெளியேற்றப்பட்ட தமிழர்கள் அனைவரும் மீண்டும் கொழும்புக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் தவறுக்கு பிரயாச்சித்தம் கிடையாது. எப்படி இது நடந்தது என்று தெரியவில்லை. அதிகாரிகள் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்க முடியாது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும். தமிழர்கள் இலங்கையின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க தகுதி படைத்தவர்கள், உரிமை படைத்தவர்கள். இதுபோன்ற தவறு எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் விக்கிரமநாயகே.
காவல்துறையினர் கடந்த சில நாட்களாக இந்த கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, இப்போது உலக நாடுகளும், இலங்கை உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த பின்னர் மன்னிப்பு கேட்பதாக இலங்கை பிரதமர் கூறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications