தமிழகத்தில் சிக்குன்குனியாவே இல்லை-கேகேஎஸ்எஸ்ஆர்
சென்னை:தமிழ்நாட்டில் சிக்குன் குனியா காய்ச்சல் பரவவே இல்லை என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன்.
இன்று சென்னையில் சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் அதிகாரிகள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். இதில் இந்நோய் தடுப்பிற்கான விழிப்புணர்வு முகாம்கள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.
தமிழகத்தில் கேரள எல்லை பகுதிகளில் சிக்குன் குனியா காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருவோர் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். அவர்களில் யாருக்காவது இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்தில் சிகிச்சையளிக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அளவிற்கு மருத்துகள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அதற்காக வழங்கப்படும் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு உடனடியாக சிகிச்சை பெறலாம்.
குடியிருப்புகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகமல் இருக்க மருந்துகள் அடிக்கப்படும். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மலேரியா கொசு முட்டைகளை அழிக்கும் கம்பூச்சியா என்ற வகை மீனை குளம், குட்டைகளில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிக்குன் குனியாவை தடுக்க தனி மருந்துகள் கிடையாது. கொசுக்களை அழிப்பதன் மூலம் இந்நோய் பரவாமல் தடுக்க முடியும். சிக்குன் குனியா மருந்துகள் என மருந்து கடைகளில் மக்களை ஏமாற்றி விற்கக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது அரசுக்கு தெரிய வந்தால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ரூ.10,000 நிதி அளிக்கப்படும். இந்நோய் தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் ஏற்கனவே ரூ.7 கோடி வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் சசி என்பவர் சிக்குன் குனியாவால் இறந்தததாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவர் மூச்சு திணறலால் தான் இறந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் சிக்குன் குனியா காய்ச்சல் பரவவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை இப்போதே தொடங்கிவிட்டால் இந்நோய் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications