தாயின் இறந்த உடலை வலம் வந்துதிருமணம் செய்த மலேசிய வாலிபர்
கோலாலம்பூர்:திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து போன தனது தாயின் உடலை வலம் வந்து திருமணம் செய்து கொண்டார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வாலிபர்.
தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பெருமாள். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள செலாங்கூர் பகுதிக்கு குடியேறினார்.
அங்கு கண்டெய்னர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நாராயணி(47) என்ற மனைவியும், சஞ்சீவி ராஜன்(28), வனமாலி என இரு மகன்களும், சிவசங்கரி, சிவரஞ்சனி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் வனமாலிக்கும், மூத்த மகள் சிவசங்கரிக்கும் கல்யாணம் ஆகி விட்டது.
மலேசியாவில் தொழில் நடத்தி வரும் பெருமாள், சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு வைத்துள்ளார். அவ்வப்போது இங்கு தொழில் நிமித்தமாக வந்து செல்வார்.
இந்த நிலையில் சஞ்சீவிராஜனுக்குத் திருமணம் நிச்சயமானது. சசிகலா என்ற பெண்ணை அவருக்கு நிச்சயம் செய்தனர். 30ம் தேதி கல்யாணத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளும் தொடங்கின.
திருமணத்திற்குத் தேவையான ஆடைகள், நகைகள் உள்ளிட்டவற்றை சென்னையில் வாங்க முடிவு செய்த பெருமாள், மனைவியுடன் சென்னைக்கு வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நாராயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாராயணியின் மரணச் செய்தி புது மாப்பிள்ளை சஞ்சீவி ராஜனை உலுக்கி விட்டது. தாய் மீது தீராத பற்றுக் கொண்டிருக்கும் அவர் உடைந்து போய் விட்டார். நாராயணியின் உடலுடன் பெருமாள் மலேசியாவுக்குப் பயணமானார்.
செவ்வாய்க்கிழமையான நேற்று இறுதிச் சடங்குகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே, திருமணத்தை என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது பெருமாளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
அதன்படி நாராயணியின் இறுதிச் சடங்குகளோடு, சஞ்சீவிராஜனின் திருமணத்தையும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதை மணமகள் வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடந்தன. மணமக்கள் கோலத்தில் சஞ்சீவிராஜனும், சசிகலாவும் வந்து நின்றனர். நாராயணியின் பிணம் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு வந்த சஞ்சீவி ராஜன், தனது தாயாரின் கால்களுக்கு கதறி அழுதபடி பாத பூஜை செய்தார். தனது தந்தைக்கும் பாத பூஜை செய்தார்.
பின்னர் நாராயணியின் கையில் தாலியை வைத்து எடுத்து அதை சஞ்சீவி ராஜன் கையில் கொடுத்தனர். அதை அவர் சசிகலாவின் கழுத்தில் கட்டினார்.
அதன் பின்னர் அக்னி வலம் வரும் முறைக்குப் பதில், நாராயணியின் உடலை சஞ்சீவி ராஜனும், சசிகலாவும் மூன்று முறை வலம் வந்தனர்.
திருமணம் முடிந்த பின்னர் நாராயணியின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தாயின் உடலை வலம் வந்து மகன் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி மலேசியா வாழ் தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications