தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள்குண்டுவீச்சு; ஒருவர் காயம்-படகு சேதம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகுகள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் இருதயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு மீது ஐந்து குண்டுகள் வந்து விழுந்து வெடித்தது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்தது.
அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து நீந்தி அருகில் இருந்த படகில் ஏறி உயிர் தப்பினர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications