ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து வாழாமல்ஓய மாட்டேன்-வந்தனா உறுதி
சென்னை:ஸ்ரீகாந்த்தான் எனது கணவர். அவருடன் இணைந்து வாழுவேன். அதுவரை போராட்டத்திலிருந்து ஓய மாட்டேன் என்று வந்தனா உறுதியாக கூறியுள்ளார்.
அலைபாயுதே ஸ்டைலில் ரகசிய கல்யாணம் செய்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் இப்போது பெரும் மோதலில் குதித்துள்ளனர். ரகசியமாக திருமணம் செய்து கொண்ட இருவரும், ஊருக்காக இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.இதையடுத்து 18ம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயமானது. இந்த நிலையில்தான் வந்தனா குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் மீதும், அவரது அண்ணன் மீதும் பண மோசடி வழக்குகள் இருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து திருமணம் நின்று போனது.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் வந்தனா. நான் ஸ்ரீகாந்த்தின் மனைவி என்று கூறிய அவர் அதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார்.
வந்தனா உள்ளே புகுந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து ஸ்ரீகாந்த், பெற்றோர் வெளியேறி ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். வந்தனா மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். பதிலுக்கு வந்தனாவும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன். சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிய முடிவு செய்துள்ளேன் என்று அறிவித்தார் ஸ்ரீகாந்த். இதுகுறித்து வந்தனா தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது.
தொடர்ந்து ஸ்ரீகாந்த் வீட்டு வரவேற்பறையில் தங்கி போராட்டம் நடத்தி வரும் வந்தனா நேற்று செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் அவரது தாயார் ஷாலினி சந்தித்தார்.
தனது மகள் சரியாக சாப்பிடாமல் பெரும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்த ஷாலினி, ஸ்ரீகாந்த்துடன் இணைந்து வாழ்வேன், அதுவரை போராட்டத்திலிருந்து ஓயப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஷாலினி கூறுகையில், வந்தனாவுடன் இணைந்து வாழ மாட்டேன் என்று ஸ்ரீகாந்த் கூறியதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இருந்தாலும் நாங்கள் எங்களது போராட்டத்தை விடப் போவதில்லை.
ஸ்ரீகாந்த்துடன் எனது மகளை சேர்த்து வைக்கும் முயற்சிகளைத் தொடருவேன். நிச்சயதார்த்தம் நடத்தி விட்டு பின்னர் முறிந்து போய் விட்டதாக எங்களிடம் கூட கேட்காமல் அறிவித்து விட்டார்கள் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர். நேரில் பார்த்துப் பேசவும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
எங்களது குடும்பத்தின் மீது சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் உண்மை இல்லை. அது பொய் வழக்கு. அதை நாங்கள் நிரூபிக்கத்தான் போகிறோம். எனது மகனின் பங்குதாரர்கள் இருவர், போலியாக கையெழுத்துப் போட்டு எங்களது பெயரை இழுத்து விட்டு மோசடி செய்துள்ளனர். எந்தத் தவறும் செய்யாமல் மோசடிப் புகாரில் சிக்கியுள்ளோம்.
நாங்கள் தற்காப்புக்காக முன்ஜாமீன் வாங்கியதை வைத்து எங்களைக் குற்றவாளிகள் என்று முடிவு செய்து விட்டனர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்.
நாங்கள் கெளரவமானவர்கள். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம். ஆயிரக்கணக்கான குழந்தைகள் எங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள். அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி மோசடி செய்ய முடியும்.
நாங்கள் 20 நாட்கள் காத்திருந்து பார்த்தோம். திருமணம் நடக்காது என்று கூறி விட்டு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் அமைதியாக இருந்து விட்டனர். பலமுறை எனது மகள் ஸ்ரீகாந்த் வீட்டுக்குச் சென்று வாசலோடு திரும்பி வந்துள்ளார். வேறு வழியில்லாமல்தான் இப்படி வீட்டுக்குள் புக நேரிட்டு விட்டது.
நாங்கள் ஸ்ரீகாந்த்தை மதிக்கிறோம், அவரை அவமரியாதை செய்யவில்லை. சுமூக நிலை ஏற்படும் என்று நம்புகிறோம். அதற்காக காத்திருக்கிறோம். எனது மகளுக்கு ஸ்ரீகாந்த்தான் கணவர், அவளது வாழ்க்கை ஸ்ரீகாந்த்தோடு மட்டும்தான். எனது மகளுக்கு ஸ்ரீகாந்த் கிடைக்கும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை என்றார் ஷாலினி.
இதற்கிடையே, வட பழனி காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த்திடம் நாளை விசாரணை நடக்கவுள்ளது. இதற்காக அவர் நாளை காவல் நிலையத்தில் ஆஐராகிறார்.
நேற்று மாலையே ஸ்ரீகாந்த் வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. உடல் நலம் சரியில்லை என்றும் மன அழுத்தத்தில் இருப்பதால் வர இயலவில்லை என்றும் ஸ்ரீகாந்த் சார்பில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இந்த நிலையில் நாளை கண்டிப்பாக ஸ்ரீகாந்த் விசாரணைக்கு வருவார் என்று அவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications