லாரி-வேன் மோதலில் 7 விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் பலி
விருதுநகர்:விருதுநகர் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நெல்லையில் நேற்று மண்ணுரிமை மாநாடு நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேன்கள் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்தனர். மாநாடு முடிந்து அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
அவர்களில் அலங்காநல்லூர் அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரும் அடங்குவர். மாநாட்டுக்கு டாடா சுமோ காரில் வந்திருந்த அவர்கள் மாநாட்டை முடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பினர்.
இன்று அதிகாலையில், விருதுநகர் அருகே பட்டம்புதூர் என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த மணல் லாரி, சுமோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் விருதுநகர்-மதுரை சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.