3வது அணி ஜோக்கர் அணி-கருணாநிதி
சென்னை: பிரதீபா பாட்டீலை தேர்வு செய்தது நல்ல நகைசுவை என என மொழிந்து ஜோக்கர் அணி என பெயரை ஜெயலலிதா அணியினர் சூட்டிக் கொண்டிருக்க தேவையில்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,
பிரதீபா பாட்டீல் எம்ஏ, எல்எல்பி படித்த பெண்மணி, சிறந்த சமூக சேவகி. மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், துணை அமைச்சராகவும் இருந்தவர். மாநிலங்களவை துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுனராக உள்ளார். இத்தனை பதவிகளிலும் பணியாற்றியவர். மும்பையிலும், டெல்லியிலும் பெண்கள் தனி விடுதியை ஏற்படுத்தியவர். கிராமப்புற இளைஞர்களுக்கு ஜல்கோனில் பொறியியல் கல்லூரி ஆரம்பித்தவர்.
கண் பார்வையற்றவர்களுக்கு என தொழிற் பயிற்சி மையத்தையும், பள்ளிகளையும் தோற்றுவித்தவர். பெண்களுக்கென கூட்டுறவு வங்கியை உருவாக்கியவர். வெளிநாட்டில் நடந்த பல மாநாடுகளில் கலந்து கொண்டவர்.
இத்தனை பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியவர். அவரை தியாக திருவிளக்கு சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், இடதுசாரி தலைவர்களும், திமுகவில் நானும் மற்ற தோழமை கட்சிகளும் டெல்லியில் கூடி விவாதித்து, இதுவரை இந்தியாவில் பெண் குடியரசு தலைவர் அமையாத குறையை போக்க வேண்டுமென்று குடியரசு தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளரை தேர்வு செய்தோம்.
சென்னையில் 3வது அணி என்ற ஒரு அணி கூடியது. கூடுவதும், வேட்பாளரை அறிவிப்பதும் அவர்களது உரிமை. ஆனால் அதை விடுத்து குடியரசு தலைவர் வேட்பாளராக பிரதீபா பாட்டீலை அறிவித்திருப்பது நல்ல நகைச்சுவை, ஜோக் என கேலி செய்திருப்பது அந்த அணி தலைவர்களின் தரத்தையும், தகுதியையும் காட்டுகிறது.
பெரியவர்கள் ஒன்று கூடி பிள்ளையார் பிடிப்பார்கள் என்று பார்த்தால், அவர் பிடித்தது பிள்ளையாராக இல்லை என்பது ஏமாற்றம் தரும் செய்தியாக உள்ளது.
பிரதீபா பாட்டீலை தேர்வு செய்திருப்பது நல்ல நகைச்சுவை என்று கூறியிருப்பவர்கள் ஒன்பான் சுவைகளில் ஒரு சுவைகளையும் அறியாதவர்கள் என தெரிகிறது. குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பை ஜோக் எனக் கூறி, 3வது அணி ஜோக்கர் அணி என்ற பெயரை சூட்டிக் கொண்டிருக்க வேண்டாம் என்பதே என் கருத்து.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications