மதுரை இடைத் தேர்தல்-ஆயுதங்களுடன் துணை ராணுவம் ரோந்து
மதுரை:மதுரை மேற்கு தொகுதி தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் மத்திய துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத் தொகுதியில் வரும் 26ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. ஒரு பக்கம் அழகிரியின் அஞ்சா நெஞ்சன் படையினர், இன்னொரு பக்கம் அதிமுகவின் தென் மாவட்ட பெருந்தலைகள் என மதுரையே கதி கலங்கிக் கிடக்கிறது.
தேர்தலை அமைதியாக நடத்த மத்திய துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் அவர்கள் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள 21 வார்டுகளில் 24 மணி நேரமும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து 2,000 போலீஸாரும், தமிழக சிறப்பு அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து 80 மோட்டர் சைக்கிள்களும், 100 வாக்கி டாக்கிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுதியிலுள்ள பழைய குற்றவாளிகள், ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 ரெளடிகள் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோத கும்பல் மீது கண்டதும் சுட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications