கலாமுக்கு ஆதரவு பெருகுகிறது.. ஆனால் ஏற்பாரா?
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்துல் கலாமுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. ஆனாலும் அவர் போட்டியிடுவாரா என்று தெரியவில்லை.
ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி அவரையே மீண்டும் போட்டியிடுமாறு கோரியுள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர்.
அப்போது, மூன்றாவது அணியில் தலைவர்கள் நாளை (20ம் தேதி) அப்துல் கலாமை சந்தித்துப் பேச உள்ளனர். அதன் பின்னரே எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியும் என்று பதில் கிடைத்துள்ளது.
இதன்மூலம் மீண்டும் போட்டியிட கலாம் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவை அவர் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மூன்றாவது அணியில் ஆதரவு இல்லாத நிலையில் தனது தோல்வி நிச்சயமாகிவிட்டதால் போட்டியில் இருந்து விலக பாஜக சார்பிலான சுயேச்சை வேட்பாளரான பைரோன்சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைவரும் மாஜி பிரதமருமான வாஜ்பாயை அவர் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அப்போது போட்டியில் இருந்து விலக வேண்டாம் என ஷெகாவத்தை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். ஆனால், விலகிவிடுவதில் ஷெகாவத் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது.
இச் சந்திப்புக்குப் பின் ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதியாக அப்துல் கலாமே தொடர்வதாக இருந்தால் அதை விட மகிழ்ச்சியான விஷயம் ஏதும் இல்லை. அவரை ஒருமனதாக தேர்வு செய்ய அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடியரசு தலைவராக மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நானும் அவரும் 5 வருடங்களாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.
இதுவரை ஒரு முறை கூட எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது கிடையாது. அதனால் அனைத்து கட்சிகளும் சேர்ந்து அவரை குடியரசு தலைவராக்க விரும்பினால் நான் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஜெ. நாளை டெல்லி பயணம்:
இந் நிலையில் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் தலைமையிலான மூன்றாவது அணியின் தலைவர்கள் நாளை ஜனாதிபதி கலாமை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்தவுள்ளனர்.
இதற்காக ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்.
இந்த மூன்றாவது அணித் தலைவர்கள் சந்திக்க நாளை பிற்பகல் 3.30க்கு நேரம் ஒதுக்கியுள்ளார் ஜனாதிபதி கலாம்
தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தாலும், ஒருமித்த கருத்து இல்லை என்றால் கலாம் மீண்டும் போட்டியிடுவது சந்தேகமே.












Click it and Unblock the Notifications