For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை இடைத்தேர்தல்-கருத்து கணிப்புக்கு தடைதிட்டமிட்டபடி தேர்தல் நடப்பது சந்தேகமே!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்து கருத்து கணிப்பு வெளியிட பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மேற்கு தொகுதியில் 26ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குபதிவு நடைபெறும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். இதன்படி 24ம் தேதி மாலை 5 மணியுடன் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் பயமின்றி வாக்களித்து பிரதிநிதிகளை தேர்வு செய்யலாம். மதுரை தொகுதியில் வாக்களிக்க தகுதியில்லாதவர்கள் தேர்தல் நியமாகவும், சுதந்திரமாகவும் நடக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

மதுரை மேற்கு தொகுதிக்குள் 24ம் தேதி 5 மணிக்கு பிறகு சம்பந்தமில்லாத வெளியூர் நபர்கள் தங்க கூடாது எனவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

மதுரை மேற்கு தொகுதி எல்லைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. இதனால் தேவையில்லாமல் வெளிநபர்கள் யாரும் தொகுதிக்குள் நுழைய முடியாது. மாநில அரசால் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தலைவர்களும் 24ம் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

24ம் தேதி 5 மணிக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிட பத்திரிக்கைகளுக்கும், தொலைகாட்சிக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கருத்து கணிப்பை 26ம் தேதி மாலை 5 மணி வரை வெளியிடவோ அல்லது ஒளிப்பரப்பவோ கூடாது.

இந்த கருத்து கணிப்பையினை வெளியிடும் அமைப்புகள் பரப்பளவு, எத்தனை பேர், எப்படி எடுத்தனர் என்பது குறித்து விளக்க வேண்டும். கருத்து கணிப்பில் தங்களுக்குள்ள அனுபவம், தவறு சதவீதம், தொழில் பின்புறம் ஆகியவற்றையும் தெளிவாக விளக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் நரேஷ் குப்தா.

மதுரை மேற்கு தேர்தல் ரத்தாகுமா?

இதற்கிடையே மதுரை மேற்குத் தொகுதியில், தொடர்ந்து நடந்து வரும் வன்முறை மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் செயல் ஆகியவற்றைத் தொடர்ந்து இடைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையர்களுடன் விவாதித்து இறுதி முடிவு எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று மாலை டெல்லி விரைகிறார்.

மதுரை மேற்குத் தொகுதியில் வருகிற 26ம் தேதி இடைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வேட்பு மனு தாக்கல் முடிந்து பிரசாரம் தொடங்கியது முதலே, மேற்குத் தொகுதியில் பணம் விளையாடத் தொடங்கி விட்டது.

வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாக்கு கேட்பதாக திமுகவும், அதிமுகவும், காங்கிரஸும் மாறி மாறி புகார்கள் கூறி வருகின்றன. இதுதொடர்பாக நரேஷ்குப்தாவிடம் ஏராளமான புகார்கள் வந்து குவிந்துள்ளது.

இதற்கு உச்சகட்டமாக முன்னாள் மேயர் குழந்தைவேலுவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அவரது கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மேற்குத் தொகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. வாக்காளர்களிடையே தேர்தல் நாளன்று பெரும் வன்முறை மூளலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

மதுரை மேற்கில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழலால் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி பெரும் அதிருப்தி அடைந்துள்ளார்.

நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், இந்த நிலை நீடிக்க்க கூடாது. தொடர்ந்து நீடித்தால் இடைத் தேர்தலை தள்ளி வைக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

மேலும் கோபாலசாமி கூறுகையில், வேட்பு மனு தாக்கலின்போது சரமாரியாக விதிமுறைகள் மீறப்பட்டன. 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்பியும் கூட உங்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. வன்முறைக்கும் பஞ்சம் இல்லை. மதுரை மேற்குத் தொகுதியில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை சீர்படுத்தாவிட்டால் தேர்தலை நடத்துவது இயலாததாகி விடும். அனைத்து வகையிலும் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்த வேண்டும். இல்லாவிடடால், தேர்தலை தள்ளி வைக்க தயங்க மாட்டோம் என்று கடுமையாகவே கூறியுள்ளார் கோபாலசாமி.

இதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி முகர்ஜி, உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி நாஞ்சில் குமரன் ஆகியோர் மதுரை விரைந்துள்ளனர்.

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சீவ் குமாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர். சில வாக்குச் சாவடிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

முகர்ஜியின் உத்தரவுப்படி நேற்று மதுரை மேற்குத் தொகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இன்றும் 2வது நாளாக கொடி அணிவகுப்பு நடந்தது.

மேலும் மேற்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சமூக விரோதிகளையும், வன்முறை மற்றும் பணம் கொடுக்கும் செயலில் ஈடுபட்டவர்களையும் பிடிக்கும் வேலையில் போலீஸார் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த நரேஷ்குப்தா இன்று மாலை டெல்லி செல்கிறார்.

ஆணையர்களின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X