மதுரை மேற்கில் இன்று ஓய்கிறது பிரசாரம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
மதுரை மேற்குத் தொகுதியில் உறுப்பினராக இருந்த அதிமுகவின் எஸ்.வி.சண்முகம் திடீர் மரணம் அடைந்தாதல் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இடைத் தேர்தலையொட்டி மதுரை மேற்குத் தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இங்கு அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரன், பாஜக சார்பில் சசிராமன் என்கிற சீதாராமன் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக, காங்கிரஸ் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இருப்பினும் தேமுதிக வேட்பாளரும் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். அவர் கணிசமான வாக்குகளை அள்ளுவார், அதனால் பாதிப்பு அதிமுகவுக்கா, காங்கிரஸுக்கா என்ற கேள்விதான் பெரிதாக உள்ளது.
அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட பிரசாரப் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிரப் பிரசாரமும் மேற்ெகாண்டுள்ளனர்.
பிரசாரத்திற்குக் கடைசி நாளான இன்றும் ஜெயலலிதா திறந்த வேனில் வீதி வீதியாக ெசன்று செல்லூர் ராஜுவுக்காக பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் முகாமிட்டுப் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியினரை விட திமுகவினரே தேர்தல் பிரசாரத்தில் படு மும்முரமாக உள்ளனர். முதல்வரின் மகள் கனிமொழி, மகன் மு.க.அழகிரி ஆகியோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்தனர்.
திராவிடக் கட்சிகளுக்கு இணையாக விஜயகாந்த்தின் தேமுதிகவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல பாஜகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
விறுவிறுப்பாக நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு மைக் வைத்தோ, கூட்டம் போட்டோ பிரசாரம் செய்யக் கூடாது. மாறாக வீடு வீடாக நடந்து சென்று அமைதியான முறையில் வாக்கு சேகரிக்கலாம்.
நாளை ஓய்வு நாள் 26ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறும். மின்னணு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் வாக்குப் பதிவில் முதல் முறையாக புகைப்பட வாக்காளர் பட்டியல் இத்தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் கொண்டு போய் பத்திரமாக வைக்கப்படும். 28ம் தேதி காலை வாக்குகள் எண்ணப்படும். சில மணி நேரங்களிலேயே முடிவு அறிவிக்கப்படும்.
இடைத் தேர்தலையொட்டி மொத்தம் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 432 வாக்குப் பதிவு இயந்திரங்களும், அவற்றைக் கட்டுப்படுத்த 250 இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 6 கம்பெனி மத்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வெளி மாவட்டங்களைச் ேசர்ந்த 2500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு வீடியோவில் படமாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications