கொலைப் பழி சுமந்த மதுரை:நீதி கேட்கும் ஜெ.
மதுரை:கவுன்சிலர் லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலகத்தில் 3 பேர் கொலை என மதுரை மாநகரம் கொலைப்பழி சுமந்தது. அதற்கு நீதி கேட்டு மதுரைக்கு வந்துள்ளேன். மதுரை மேற்கில் அதிமுகவை வெற்றி பெற வைத்து நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியில் நேற்று ஜெயலலிதா 2வது கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டார். 30க்கும் மேற்பட்ட இடங்களில் வேன் மூலம் பிரசாரம் செய்த ஜெயலலிதா, 7 இடங்களில் வேனிலிருந்தபடியே பேசினார்.
பிரசாரத்தின்போது ஜெயலலிதா பேசுகையில், இங்கே காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பட்டப் பகலில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. சட்டம் பயந்து நடுங்குகிறது.
பெண் கவுன்சிலர் லீலாவதி பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டார். பத்திரிக்கை அலுவலகத்தில் 3 அப்பாவி ஊழியர்கள் வெறியாட்டத்திற்குப் பலியானார்கள்.
அவற்றையல்லாம் பார்த்தது நீங்கள், பழி சுமந்தது மதுரை. அதற்கெல்லாம் நீதி கேட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். நல்ல தீர்ப்பு வழங்குங்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. இப்போது அமைதி குலைந்து போய் விட்டது. ரவுடிகளின் அராஜகம் பெருகி விட்டது, சமூக விரோதிகளின் நடவடிக்கை அதிகரித்து விட்டது. இதற்கெல்லாம் யார் காரணம். இந்த ஆட்சி இனியும் தேவைதானா.
இனியும் இந்த ஆட்சி தொடரத்தான் வேண்டுமா. அமைதியான தமிழகத்தையும், அமைதியான மதுரையையும் உருவாக்குவோம்.
சுதந்திரமாக செயல்படக் கூடிய தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார் கருணாநிதி. அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை மிரட்டுகிறார்கள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்கப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நீங்கள் நீதி வழங்க வேண்டும்.
முன்பெல்லாம் பர்ஸ் நிறையப் பணம் கொண்டு போய் பை நிறையப் பொருட்கள் வாங்கினோம். இப்போது பையில் பணம் கொண்டு போய் பர்சில் பொருட்கள் வாங்கும் நிலை வந்து விட்டது.
இந்த அரசு இப்படியே தொடர்ந்தால் வன்முறை பெருகும், அராஜகம் தாண்டவமாடும். தீவிரவாதம் தலைவிரித்தாடும். எனவே திமுக என்கிற தீய சக்தியை அழித்திட வேண்டும்.
வாக்களார்களே திமுக கூட்டணியினர் கள்ள ஓட்டுப் போட திட்டமிட்டுள்ளனர். எனவே காலையிலேயே வாக்குச் சாவடிக்குப் போய் விடுங்கள். உங்களது வாக்குகளை செலுத்தி நல்ல தீர்ப்பினை வழங்குங்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications