ஈழத் தமிழர்களுக்காக டர்பனில் பேரணி
டர்பன்:
இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.
தென் ஆப்பிரிக்க தமிழர் ஒத்துழைப்புக் குழு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரும் திரளான தமிழர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட இந்தப் பேரணி, இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வொர்த் நகரியத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் முடிவடைந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவப் படம் ஏந்திய பதாகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர். தமிழர்களை அழிக்கும் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உலக சமுதாயத்தைக் கோரி கோஷம் எழுப்பப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் எம்.பி. எம்.கே.ஈழவேந்தன் கூருகையில், தமிழர்களுக்கு தனி தாயகம் கோரி நாங்கள் போராடி வருகிறோம். தமிழர்களை பூண்டோடு அழிக்க இலங்கை அரசு முயலுகிறது, எனவேதான் தனித் தாயகம் கோருகிறோம்.
தென் ஆப்பிரிக்க அரசு இலங்கைத் தமிழர்களைக் காக்க குரல் கொடுக்க வேண்டும். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு தென் ஆப்பிரிக்க அரசு, இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
பேரணியின் இறுதியில், தென் ஆப்பிரிக்க மனித உரிமைக் கழக தலைவர் பேராசிரியர் கார்த்தி கோவேந்தர், துணை மேயர் லோகநாதன் நாயுடு ஆகியோரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications