மணல் திருட்டை தடுக்க வந்த பெண் தாசில்தாரை கொல்ல முயற்சி!!
ஊத்துக்கோட்டை:மணல் திருட்டை தடுக்க வந்த பெண் தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை மர்ம கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவிதமான முதலீடும் இல்லாமல் வெரும் ரெளடியிஸம், அரசியல் ஆதரவோடு நடக்கும் தொழில் மணல் கொள்ளை.
லாரியை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு ரெளடிகள் உதவியோடு மணலை சட்டவிரோதமாக அள்ளி விற்பதில் கரை வேட்டிகளை மிஞ்ச ஆளே இல்லை. இவர்களுக்கு உதவுவது அதிகாரிகளும் போலீசாரும்.
ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் இதை தடுக்க முனைவதுண்டு. அவர்களில் சிலரை லாரியை ஏற்றி கொலை கூட செய்துள்ளனர்.
இந் நிலையில் ஊத்துக்கோட்டை செங்கரை அருகே ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தீவிரமாக நடந்து வருகிறது.
இதைத் தடுக்க திருவள்ளூர் ஆர்டிஓ மாரியப்பன் ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஸ்வரிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் தன்னுடன் வருவாய்துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு நேற்றிரவு 11 மணிக்கு ஆற்றுப் பகுதிக்கு சென்றார்.
அங்கு ஒரு மர்ம கும்பல் ஜேசிபி எந்திரம், டிராக்டர் ஆகியவற்றுடன் நின்றுக் கொண்டு அனுமதியில்லாமல் மணலை எடுத்துக் கொண்டிருந்தது. இதை அதிகாரிகள் தடுக்க முயன்றனர்.
அப்போது அந்த மர்ம கும்பல் கையில் வைத்திருந்த மண்வெட்டி மற்றும் சில ஆயுதங்களோடு தாசில்தாரையும் அவருடன் வந்த வருவாய்துறை அதிகாரிகளையும் தாக்கினர்.
இதையடுத்து அதிகாரிகள் உயிருக்கு பயந்து ஓடினர். ஆனாலும் அவர்களை அக் கும்பல் விரட்டி வந்தது.
தாசில்தாரும், அதிகாரிகளும் ஜீப்பில் ஏறி தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸாருக்கு தாசில்தார் தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி, போலீஸ் படையினரோடு சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
ஆனால், அதற்குள் அந்தக் கும்பல் எந்திரம், டிராக்டரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி விட்டது. பெண் தாசில்தாரை கொல்ல முயன்ற அக் கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications