பிரதீபா கூட்டுறவு வங்கியின் ஊழல்கள்:சப்பை கட்டு கட்டும் காங்கிரஸ்
மும்பை:குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் தொடங்கிய வங்கி நிதியை அவரது தம்பியும், உறவினர்களும் சேர்ந்து சூறையாடியதால் வங்கி திவால் ஆகி விட்டதாக அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இந்த வங்கி மீது ஏராளமான ஊழல் மற்றும் மோசடிப் புகார்களும் எழுந்துள்ளன. ஆனால் இவற்றுக்கும், பிரதீபாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.
![]() |
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்கள், சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
முதலில் அவரது தம்பியை, கொலைக்குற்றத்திலிருந்து காப்பாற்ற முயற்சித்தார் பிரதீபா என்ற புகார் எழுந்தது. ஆனால் இந்ததப் புகார் பொய்யானது, பாஜக மோசமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் கூறியது.
இந்த நிலையில் இன்னொரு மெகா புகார் பிரதீபா மீது எழுந்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவனில் பிரதீபா பாட்டீல் ஒரு கூட்டுறவு வங்கியை நிறுவினார். பெண்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுறவு வங்கிக்கு பிரதீபா மகிளா சஹகாரி வங்கி என்று பெயர்.
இந்த வங்கியின் நிர்வாகத்தில் தற்போது பிரதீபா பாட்டீல் இல்லை. கடந்த 1994ம் ஆண்டு வரை இந்த வங்கி நிர்வாகத்தில் பிரதீபா பாட்டீல் இருந்தார். அதன் பிறகு விலகி விட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.
கடந்த 2003ம் ஆண்டு இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. பெண்கள் நலனுக்கான வங்கி என்ற பெயரில், பிரதீபா பாட்டீலின் உறவினர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கப்பட்டு வந்ததாலும், பின்னர் அவர்கள் வாங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்ததாலும் இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது.
மேலும் வங்கி மீது கூறப்பட்ட ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள் குறித்து விசாரித்த அரசு சார்பிலான பிரதிநிதியான அமோல் கைர்னார், இதுதொடர்பாக வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பினார்.
அந்த நோட்டீஸில், வங்கியின் இருப்புத் தொகைய விட கூடுதலான தொகைக்கு பிரதீபாவின் உறவினர்களுக்கு கடன் தொகை கொடுத்தது ஏன், உறவினர்கள் கட்டாத கடன் தொகையை தள்ளுபடி செய்தது எந்த அடிப்படையில், பிரதீபா பாட்டீலுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்ட கடன் தொகைய ரத்து செய்தது ஏன் என்று பல கேள்விகளை அதில் கைர்னார் கேட்டிருந்தார்.
மேலும், வங்கி போர்டு இயக்குநர்களாக அரசு விதிப்பி, எஸ்.சி, எஸ்.டி சமுதாயத்தினரைத் தேர்ந்தெடுக்காமல், உறவினர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதுதான் தற்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. பிரதீபா பாட்டீலின் தம்பி திலீப் சிங் பாட்டீல் மற்றும் உறவினர்கள்தான் பெருமளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் வங்கிப் பணத்தை இஷ்டத்திற்கு எடுத்து செலவழித்ததால்தான் வங்கி சீர்குலைந்து போனதாக வங்கி ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இவர்களின் செயலால் வங்கிக்கு ரூ. 2.24 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாம். திலீப் சிங் பாட்டீலும் அவரது உறவினர்களும் வங்கி தொலைபேசியிலிருந்து சரமாரியாக பேசுவார்களாம். இதனால் தொலைபேசிக் கட்டணம் மட்டும் ஒருமுறை ரூ. 12 லட்சத்திற்கு வந்ததாம்.
இதேபோல, கார்கில் போர் வீரர் நல நிதிக்காக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் அந்தத் தொகையை உரியவர்களிடம் சேர்க்காமல் அவர்களே பங்கிட்டுக் கொண்டார்களாம்.
ஆனால் இந்தப் புகார்களை காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இவை எல்லாம் பொய்யான புகார்கள். 1994ம் ஆண்டு முதல் இந்த வங்கிக்கும், பிரதீபா பாட்டீலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் சிங்வி.
ஆனால் வங்கி திவாலனாதாக கூறி ரிசர்வ் வங்கி உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்தது வரை பிரதீபா பாட்டீல் இந்த வங்கியின் இயக்குநர் பொறுப்பில் இருந்துள்ளார் என்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
2003ம் ஆண்டு வங்கி திவாலனாதாக அறிவிக்கப்பட்டபோது பிரதீபா முன்னிலையில்தான் அதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாம்.
பிரதீபா மீது எழுந்துள்ள அழுத்தமான புகார்களுக்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை உறுதியான மறுப்பு வெளியாகவில்லை. இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்மானித்துள்ளது.













Click it and Unblock the Notifications