பெட்ரோல், டீசல், கேஸ் விலை கிடுகிடு உயர்வு?
டெல்லி:பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை பெருமளவு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து அவ்வப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இடையில், உ.பி. மாநில சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் அதை மனதில் கொண்டு விலை உயர்வை மத்திய அரசு எடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில், இனியும் நஷ்டத்தை தாங்க முடியாது என்று மத்திய அரசுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து ஆலோசிக்கிறது. இக்கூட்டத்தின் இறுதியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 160 வரை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.50 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4.41 வரையிலும் அதிகரிக்கலாம். மண்ணெண்ணையின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications