இனி ஜனாதிபதிக்கு ரூ. 1 லட்சம் சம்பளம்
டெல்லி:குடியரசுத் தலைவரின் சம்பளத்தை ரூ. 1 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவுக்கு இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவருக்கு தற்போது மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. துணை குடியரசுத் தலைவருக்கு ரூ. 40 ஆயிரமும், ஆளுநர்களுக்கு மாதம் 36 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி குடியரசுத் தலைவரின் சம்பளத்தை ரூ. 1 லட்சமாகவும், துணை குடியரசுத் தலைவரின் சம்பளத்தை ரூ. 85 ஆயிரமாகவும், ஆளுநர்களின் சம்பளத்தை ரூ. 75 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இதுதவிர முன்னாள் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோருக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு அவர்கள் வாழும் காலம் வரை டெல்லியில் வசிக்க பங்களா ஒதுக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications