அழகிரிக்கு நன்றி- காங்கிரஸ்
சென்னை:மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,
மதுரை மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும், முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், முக்கியமாக அழகிரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுகவிடமிருந்து மதுரை மேற்கு தொகுதியை கைப்பற்றியதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை கருணாநிதி சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.
இந்த தேர்தல் முடிவு அவருக்கு மக்கள் கொடுத்த பரிசு.
தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதை வைத்து வித்தியாசமான கருத்துகளை கூறி வந்தனர். நான் 4 முறை மதுரையில் பிரச்சாரம் செய்தேன். மக்களை சந்தித்தேன். அவர்களின் மனநிலையை அறிந்துக் கொண்டு 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறினேன்.
அதை விட கூடுதலாக வாக்குகள் பதிவானதற்கு காரணம் மக்கள் மத்திய, மாநில அரசுகள் மேல் வைத்துள்ள நம்பிக்கையே.
ஆளும் அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தால் வாக்குப் பதிவு குறைந்திருக்கும். பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதே இதற்குக் காரணம்.
ஜெயலலிதா தான் ஒரு பெண் என நினைக்காமல் தன்னை தவிர வேறு யாரும் உயர்ந்த பதவிக்கு வரக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அந்த எண்ணத்தில் சோனியாவை எதிர்த்தார்.
அவருக்கு மக்கள் தேர்தலில் மரண அடி கொடுத்து, சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
ஜெயலலிதா தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். பிரதீபா பாட்டீலுக்கு வாக்களிக்க வேண்டும்.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் ஜனநாயக கடமைகளை மறந்து சட்டமன்றத்தில் தொகுதி பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை. அவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என்ற மக்களின் வேதனையின் வெளிபாடுதான் இந்த தேர்தல் வெற்றி.
அதிமுகவின் தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த ஜெயலலிதா பல சதி திட்டங்களில் ஈடுபட்டார். அவற்றையெல்லாம் முறியடித்து தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரையில் வெற்றி பெற்றதற்கு பண பலம் காரணம் அல்ல. மத்திய மாநில அரசுகளின் சாதனைகள் தான் காரணம் என்றார்.
அதே போல சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் 10,000 வாலா சரவெடி வெடித்தும் , இனிப்பு வழங்கியும் இந்த வெற்றியைக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications