தேசிய அரசிலுக்கு நான் ரெடி- நாட்டைசூப்பர் பவர் ஆக்குவதே என் லட்சியம்: ஜெ.
டெல்லி:
பிரமதரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போல குடியரசுத் தலைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதனால்தான் பிரதீபா பாட்டீலை அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜெயலலிதா சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டன. இந் நிலையில், நமது நாட்டை மீண்டும் ஒரு அந்நிய சக்தியிடம் (சோனியா) ஒப்படைக்க வேண்டுமா? ஒரு அந்நிய சக்தியிடம், அந்நிய நாட்டுப் பெண்மணியின் காலடியில் நமது நாட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது?
சோனியா காந்தி பிரதமர் பதவியை உதறி விட்டார், தியாகம் செய்து விட்டார் என்று கூறுவது முட்டாள்தனம். அவர் பிரதமர் பதவியை பின்னாலிருந்து இயக்கி வருவதை மறந்து விட முடியாது. அவர்தான் உண்மையான அதிகார மையமாக இருக்கிறார். அவர் சொல்லித்தான் எல்லாம் நடக்கிறது.
பிரதமரை தனது ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்கனவே கட்டுப்படுத்தி வருகிறார் சோனியா காந்தி. தற்போது குடியரசுத் தலைவரையும் இதுபோல ரிமோட் மூலம் கட்டுப்படுத்த அவர் விரும்புகிறார். அதனால்தான் பிரதீபாவை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
பிரதீபா பாட்டீல் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நான் அங்கீகரித்து விட முடியாது. வேட்பாளரின் தரம், தகுதி, திறமையைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும், ஆதரிக்க முடியும்.
கலாம் ஏன் ..?:
நாங்கள் நாட்டின் நலனைக் கருதி அப்துல் கலாம் அவர்களை வேட்பாளராக்க தீர்மானித்தோம். ஆனால் அவர்களோ தங்களது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதீபா பாட்டீலை தேர்வு செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். முதலில் வாஜ்பாய் என்னிடம் பேசினார். ஷெகாவத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.
அப்போது அவரிடம், நான் ஒரு புதிய கூட்டணியின் உறுப்பினர். எனவே என்னால் சுயமாக முடிவெடுக்க முடியாது என்று கூறினேன்.
பின்னர் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் டாக்டர் அப்துல் கலாமின் பெயரை முன்மொழிந்தோம். பின்னர் நான் அப்துல் கலாமுடன் போனில் பேசினேன். மற்ற கூட்டணி தலைவர்களும் பேசினர்.
உங்களது பெயரை நாங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்மொழிந்துள்ளோம். நீங்கள் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் கூறினோம். அதற்கு கலாம், நான் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டேன் என்றார்.
ஆனால் நாங்கள் நாட்டின் நலன் கருதி நீங்கள் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கோரினோம். அதை ஏற்று அவர் நேரம் ஒதுக்கினார்.
ஆனால் கலாமை இருமுறை நேரில் சந்தித்தும் எங்களால் அவரது மனதை மாற்ற முடியவில்லை. ஒரு வேளை, ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் கூட்டணிக்கு அதிக எம்.பிக்கள் இருப்பதை மனதில் கொண்டு அவர் போட்டியிட விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
தேசிய அரசியலுக்கு ரெடி:
தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட நான் தயாராக உள்ளேன். அதற்கான காலம் வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். பிராந்திய கட்சிகள், பிராந்திய சக்திகள், மத்தியில் ஒருங்கிணைந்து செயல்பட இதுதான் சரியான நேரம். தேசிய அளவிலும், மத்திய அரசியலிலும் பிராந்தியக் கட்சிகளை இனியும் புறக்கணிக்க முடியாது.
தேசிய அரசியலுக்கு நான் அதிக நேரம் செலவிடுவேனா என்பதை காலம்தான் தீர்மானிக்க முடியும். என்னைப் பொறுத்தவரை, எனது வாழ்க்கை லட்சியமே மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றுவதுதான்.
எனக்கென்று குடும்பம் கிடையாது, எனக்கென்ற சொந்த விருப்பு, வெறுப்புகள் எதுவும் இல்லை. எனவே நாட்டுக்காக உழைக்கத்தான் நான் காத்திருக்கிறேன்.
எப்போது, எப்படி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். நமது நாடு உலகின் சூப்பர் பவர் நாடாக மாற வேண்டும் என்பதே எனது லட்சியம். அந்த லட்சியம் எனது வாழ்நாளுக்குள் நிறைவேறும் என்று நிச்சயமாக நம்புகிறேன். அந்த லட்சியத்தை அடைய நான் தீவிரமாக பாடுபடப் போகிறேன்.
இடதுசாரிகளுடன் கூட்டணி:
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இடதுசாரித் தலைவர்களுடன் நான் இதுவரை பேசவில்லை. இருந்தாலும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் பிற தலைவர்கள், இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
மத்தியில் நாங்களும், இடதுசாரிகளும் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஏன் நாங்கள் இணைந்து செயல்படக் கூடாதா?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகள் கூட்டணியை விட ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகள் கூட்டணிதான் இயற்கையானது, சரியானது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் தங்களது கொள்கையிலிருந்து இடதுசாரிகள் விலகி விட்டனர். தாங்கள் சொல்வதை செயலில் காட்ட முடியாத நிலையில் உள்ளனர். தங்களது கொள்கைகளைக் கூட செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
வழக்குகளால் கவலை இல்லை:
என் மீது தொடரப்பட்ட, தொடரப்பட்டு வரும் வழக்குகள் குறித்து நான் கவலைப்படவில்லை. இவற்றால் எனது தேசிய அரசியல் பிரவேசத்தை, டெல்லி அரசியலில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதைத் தடுத்து நிறுத்த முடியாது.
என் மீது தொடரப்பட்ட வழக்குகளில் நான் கடுமையாகப் போராடினேன். அதன் விளைவாக 12 வழக்குகளில் நான் குற்றவாளி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
கூட்டணி அரசியலில் நெளிவு, சுளிவு மிகவும் அவசியம். கூட்டணிக் கட்சிகளின் இயல்புக்கேற்ப வளைந்து கொடுக்கும் மனப்பாங்கு என்னிடம் நிறையவே உள்ளது.
நான் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாதவர் என்று கூறுவதில் உண்மை இல்லை. அந்த குணம்தான் என்னை தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாமல் தடுப்பதாக கூறுவதிலும் அர்த்தம் இல்லை.
நான் பன்முகம் கொண்ட பெண். எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள முடியும். நான் கடுமையான, முடிவுகளில் உறுதியான பெண்தான். அப்படி இருந்ததால்தான் இந்த நிலைக்கு நான் உயர்ந்துள்ளேன். அதேசமயம், நான் வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்ட பெண்தான்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஷெகாவத்துக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம். அவர் போட்டியிடுவதே வீணான ஒன்றுதான்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது குறித்த முடிவை நாங்கள் எடுத்தாலும் எடுக்கலாம். இப்போதைக்கு வேறு உகந்த வழி இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் இதுகுறித்து கூட்டணித் தலைவர்கள் கூடிப் பேசித்தான் முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் ஜெயலலிதா.
தேசிய அளவில் சோனியா காந்திக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட ஜெயலலிதா தீர்மானித்துள்ளதையே அவரது இந்தப் பேட்டி வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications