ஜெயலலிதாவுக்கு மதுரை மக்கள் பாடம்-வாசன்
சென்னை:
மக்கள் ஆதரவால் மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்று மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் மாநிலத்தில் திமுக அரசு ஆகியவை செய்து வரும், அமல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை மக்கள் ஆதரிக்கின்றனர் என்பதன் அடையாளமே இந்த வெற்றி.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து கடுமையாக செய்து வரும் விமர்சனங்களால்தான் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது.
அதிமுக தோல்வியைக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் குறிப்பாக மதுரை மேற்குத் தொகுதி மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர்.
சோனியா காந்தி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது என்றார் வாசன்.
முன்னதாக தமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழாவையொட்டி தேசிய மின் தொழிலாளர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாசன் பேசுகையில்,தமிழகத்திற்கு எட்டு துறைகளில் ரூ. 28 ஆயிரத்து 160 கோடி மதிப்பிலான 61 புதிய திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இன்னும் பல திட்டங்களை தமிழகத்திற்கு ஒதுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இணைந்து மக்கள் நலனுக்காக, உழைப்பாளர்களின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன. உண்மையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது திறமையான செயல்பாட்டால், பல்வேறு துறைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 447 வேலை நிறுத்தங்களை தவிர்த்துள்ளது என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications