திமுக பிரமுகர்களுக்குள் முன் விரோதம்-மோதல்முன்னாள் பேரூராட்சித் தலைவர் கொலை
திருப்போரூர்:காலவாக்கத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 56) திருப்போரூர் திமுக அவைத் தலைவராகவும் பேரூராட்சித் தலைவராக இருந்தவர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் முனுசாமி தனது மனைவி வேதம்மாளுக்கு திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டார்.அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரும், தனது மனைவி செல்விக்கு திமுகவில் சீட் கேட்டார்.
இதையடுத்து தேவராஜ் மனைவிக்கு சீட் தரப்பட்டது. இதனால் முனுசாமி தனது மனைவியை சுயேட்சையாக நிறுத்தினார். இதில் செல்வி வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவரானார்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் பகை ஏற்பட்டது.
இந் நிலையில் காலவாக்கத்தில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. இங்கு வெட்டப்பட்ட கிடாக்கள் ஏலம் விடப்பட்டன.
ஏலம் எடுப்பதில் முனுசாமி-தேவராஜ் ஆகியோர் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதல் இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.
இதில் முனுசாமியின் மகன்கள் மோகன் மற்றும் சரவணன் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மகன்கள் தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுக்க திருப்போரூர் காவல் நிலையத்திற்கு முனுசாமி சென்றார்.
ஆனால் அங்கும் தேவராஜின் ஆதரவாளர்கள் முனுசாமியை போலீஸார் முன்னிலையிலேயே கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இதை அறிந்த முனுசாமியின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து, மயங்கி விழுந்து கிடந்த முனுசாமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் முனுசாமி சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி முனுசாமியின் ஆதரவாளர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதீபா பாட்டீலுக்காக சென்னையில் நடந்த திமுக பேரணியில் பங்கேற்க தேவராஜ் சென்றிருந்த நிலையில் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் மீது முனுசாமி தரப்பு தாக்குதல் நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டது.
இதனால் காலவாக்கத்தில் பதட்ட நிலை ஏற்பட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 20 பேரை கைது செய்துள்ளனர்.