பரவி வரும் எலிக் காய்ச்சல்-2 பேர் பலி:ராமநாதபுரத்தில் பீதி
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் போன்ற வித்தியாசமான காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சிக்குன்குனியா, டெங்கு என உயிரைப் பறிக்கும் காய்ச்சல்களால் தமிழக மக்கள் சில மாதங்களுக்கு முன்பு பெரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வித்தியாசமான புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை (காரைக்குடி அருகே உள்ளது) மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த புதிய வகை காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.
இந்தக் காய்ச்சலுக்கு கிடத்திருக்கையைச் சேர்ந்த ராமபாண்டி, அதே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாசடைந்த குடிநீரைக் குடித்ததால்தான் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது என்ன வகை காய்ச்சல் என்று அதிகாரிகள் விளக்க மறுத்து விட்டனர். அநேகமாக இது எலிக் காய்ச்சலாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சித் தலைவர் கிர்லோஷ் குமார் கூறுகையில் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதுகுளத்தூரில் தங்கியிருந்து இந்தக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications