கிளாஸ்கோ தாக்குதல்: ஈராக் டாக்டர் கோர்ட்டில் ஆஜர்
லண்டன்:கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த கார் குண்டுத் தாக்குதல், லண்டனில் கார் குண்டுகள் வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தோல்வியில் முடிந்த இந்த இரு தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த முகம்மது ஹனீப், கபீல் அகமது, ஷபீல் அகமது உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹனீப் மட்டும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முதல் நபராக பிலால் அப்துல்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெரும் நாசச் செயலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டியதாக பிலால் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நேற்று அவர் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் பெயரும், பிறந்த தேதியும் கேட்கப்பட்டது. அவற்றுக்கு பிலால் அப்துல்லா பதிலளித்தார்.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்ற ஊழியர் விவரித்தார். அதன் பிறகு அவரை ஜூலை 27ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறும், அன்றைய தினம் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்துல்லா சார்பில் ஜாமீன் கோரி மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. பிலால் அப்துல்லா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம். கபீல் அகமது (எரிந்த ஜீப்பை ஓட்டி வந்தவர்), அவரது தம்பி ஷபீல் அகமது, டாக்டர் முகம்மது ஆஷா, அவரது மனைவி மார்வா ஆஷா, முகம்மது ஹனீப் மற்றும் இரு பயிற்சி டாக்டர்கள்.












Click it and Unblock the Notifications