விவசாயிகள் வாடுகையில் பெங்களூரில்ஓய்வா? கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்
சென்னை: காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் மேட்டூர் தண்ணீரை எதிர்பார்த்து வாடிக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி பெங்களூர் சென்று ஓய்வு எடுப்பதா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நீருக்காக விவசாயிகள் காத்திருக்கும் இந்த நேரத்தில் கர்நாடகம் தண்ணீர் அளிக்க மறுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், இந்த வருடம் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதாக காரணம் காட்டி திறக்கப்படவில்லை.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா, கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய செயல் நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிப்பதாகும்.
இந்த நிலையில், காவிரி நீரை பெற்று தராமல் 3 நாட்கள் ஓய்வெடுப்பதற்காக பெங்களூருக்கு சென்றுள்ளார் முதல்வர் கருணாநிதி.
தங்களின் உரிமையை நிலை நாட்டி காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் திமுக சமைனாரிட்டி அரசை தட்டி எழுப்ப வேண்டியதுள்ளது.
பிரதமருக்கு இது குறித்து கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டது என கருதுகிறார் கருணாநிதி. இந்த செயலுக்கு என் கடும் கண்டத்தை தெரிவித்துக் கொளகிறேன் என ஜெயலலிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications