கலாம் எங்களுடன் தங்க வேண்டும்:அண்ணன் கோரிக்கை
ராமேஸ்வரம்:குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்துல் கலாம் எங்களுடன்தான் தங்க வேண்டும் என்று அவரது அண்ணன் முகம்மது முத்து மீரான் மரைக்காயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் சாதாரண பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த கலாம், ராமநாதபுரத்தில் மேல் நிலைக் கல்வியை முடித்தார். பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டியில் பட்ட மேற்படிப்பை படித்த கலாம், அணு விஞ்ஞானியாக உருவெடுத்தார்.
![]() |
அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலாம், பொக்ரானில் முதன் முதலாக இந்தியா அணுகுண்டை சோதனை செய்து பார்த்தபோது அந்த குண்டின் பின்னணியில் முக்கியப் பங்கு வகித்தார். அப்துல் கலாமின் இந்த சாதனைக்குப் பரிசாக குடியரசுத் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது.
நாட்டுக்கு சேவையாற்றுவதையே முக்கியமாகக் கொண்டிருந்த கலாம் திருமணம் செய்து கொள்ளாமல் தேசச் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கலாம்.
குடியரசுத் தலைவர் ஆன பிறகு ராஷ்டிரபதி பவனிலேயே செட்டிலாகி விடாமல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களைச சந்தித்து இந்தியாவை வல்லரசாக்க மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று போதித்து வந்தார்.
அவரது இந்த உத்வேகப் பேச்சு மாணவ, மாணவியர்களிடையே உத்வேகத்தையும், உற்சாகத்தையும், உந்துதலையும் கொடுத்தது.
கலாமின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் அவர் தங்குவதற்காக டெல்லியிலேயே பங்களா ஒன்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்குதான் கலாம் தங்கவுள்ளார்.
இந்த நிலையில் கலாம் தங்களுடன் வந்து தங்க வேண்டும் என்று அவரது அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் கோரியுள்ளார்.
அப்துல் கலாம் பிறந்து வளர்ந்த வீடு, ராமேசுவரம் பள்ளி வாசல் தெருவில் உள்ளது. பதவிக்காலம் முடிந்த பின்பு தன் தம்பி வந்து தங்குவதற்காக தனி அறையை ஒதுக்கி புதுப்பித்து வைத்துள்ளார் அண்ணன் மரைக்காயர்.
இது குறித்து அவர் கூறுகையில், படித்த காலத்தில் மட்டுமல்லாது அதன் பின்பும் நாட்டுக்காக இது நாள் வரை கலாம் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வெளியூர்களிலேயே கழித்து விட்டார்.
நாட்டுக்காக என் தம்பி ஆற்றிய உழைப்பை கண்டு பெருமை அடைகிறேன். அவருடைய பதவிக் காலம் முடிந்த பின்பு, அவருடைய பிறந்த ஊரான ராமேசுவரத்தில், இந்த பூர்வீக வீட்டில் எங்களுடன் தங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவருக்காக மாடியில், அவரின் அறையை தயார் செய்து வைத்துள்ளோம்.
இது சம்பந்தமாக முடிவு செய்வது கலாமின் விருப்பம். எனது தம்பி எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருக்கும். வாழ்வின் பெரும் பகுதியை வெளியூரில் கழித்த கலாம் இனிமேல் எங்களுடன் தங்குவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார் மரைக்காயர்.
கலாமைப் பொருத்தவரை தேசமே அவரது வீடு, இந்திய மக்களே அவரது உறவுகள், இந்த நிலையில், அண்ணன் குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் அவர் செட்டிலாவாரா என்பது தெரியவில்லை.













Click it and Unblock the Notifications