சந்திரசேகருக்கு கருணாநிதி புகழாரம்
சென்னை:கடைசி வரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், சமுதாயத் தொண்டாற்றுவதிலும், மதச்சார்பின்மையை உறுதியாக கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்தவர் சந்திரசேகர் என்று முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளமை முதலே சமுதாயத் தொண்டில் ஈடுபட்டவர் சந்திரசேகர்.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். கன்னியாகுமரி முதல் டெல்லியில் அண்ணல் காந்தி சமாதி வரை நீண்ட நெடும் பாதயாத்திரை மேற்கொண்டவர்.
சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டு இறுதி வரை மதச்சார்பற்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்தவர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சந்திரசேகர் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தனித்தன்மை வாய்ந்தவர் சந்திரசேகர். சிறந்த அரசியல்வாதியாக மட்டுமின்றி, நாடாளுமன்றவாதியாகவும் தனி முத்திரை பதித்தவர். கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். கொண்ட கொள்கைகளில் உறுதியானவர். வார்த்தை ஜாலம் செய்யாதவர், தேசியவாதி. அவரது மரணம், இந்திய அரசியலுக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications