புலிகள் நிலைகள் மீது ராணுவம், கடற்படைகடும் தாக்கு-15 பேர் பலி
கொழும்பு:விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை ராணுவமும், கடற்படையும் நடத்திய கடும் தாக்குதலில் 15 விடுதலைப் புலிகள் இறந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையின் கிழக்கில் உள்ள தொப்பிகலா என்ற புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயற்சித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இங்கு சண்டை தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில்நேற்று இப்பகுதியில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட புலிகள் சிலரின் உடல்களின் சிதறிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதே பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த மோதலில், 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திரிகோணமலை மாவட்டத்தில் நேற்று இரவு கடல் புலிகள் பிரிவினருக்கும், கடற்படை வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.
மொத்தம் 15 படகுகளில் கடல் புலிகள் வந்து கடற்படையின் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். அதேபோல கல்லாறு பகுதியிலும் கடல் புலிகள் திடீர் தாக்குதலில் குதித்தனர்.
இந்த இரு முனைத் தாக்குதலால் கடற்படை வீரர்கள் திணறினர். இதையடுத்து அவர்களுக்கு உதவியாக ராணுவம் வரவழைக்கப்பட்டது.
கடுமையாக நடந்த இந்த சண்டையின் இறுதியில் விடுதலைப் புலிகள் நாயரு என்ற பகுதிக்குள் பின்வாங்கிச் சென்று விட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடற்படையினர் அத்துமீறி வர முயன்றதால்தான் தாங்கள் தாக்க நேர்ந்ததாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை மூன்று மணி நேரம் நடந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications