ரூ. 10,000 கோடி முறைகேடு:தயாநிதி மீது பரபரப்புப் புகார்
டெல்லி:பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மொபைல் போன் கருவிகளை வாங்க டெண்டர் விட்டதில் ரூ. 10,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா உத்தரவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த மார்ச் மாதம் 4.55 கோடி புதிய மொபைல் போன் இணைப்புக்கள் வழங்குவதற்குத் தேவையான ஹேண்ட்செட்களை வாங்க தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெண்டர் விடப்பட்டது. இதில் நோக்கியா, மோட்டோரோலா, எரிக்சன், சீமன்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் எரிக்சன் மற்றும் நோக்கியா நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைத்தது.
இதை எதிர்த்து மோட்டோரோலா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், மிகக் குறைந்த விலைக்கு டெண்டர் கேட்டும் கூட அதைத் தங்களுக்குத் தராமல் அதிக விலைக்கு கோட் செய்த நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது தவறு என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ராஜா புதிய அமைச்சர் ஆனார்.
இதே போன்ற கருவிகளை வாங்க மும்பையின் எம்.டி.என்.எல். நிறுவனம் டெண்டர் விட்டபோது, ஒரு கருவிக்கு ரூ. 2,845 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் தயாநிதி மாறன் தலைமையிலான அமைச்சகம் அந்த டெண்டர் விட்டபோது ஒரு கருவிக்கு ரூ. 4,949 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த விலைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டிருந்தால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 10,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று ராஜா அமைச்சரான பிறகு தெரிய வந்ததாம். இதையடுத்து இந்த டெண்டரை நிறுத்த ராஜா உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும், புதிய ெடண்டர் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications