ரூ.10 லட்சம் கேட்டு நாகர்கோவில்சிறுவன் பெங்களூருக்கு கடத்தலா?
நாகர்கோவில்: நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுவனை கடத்திச் சென்ற கும்பல் அவனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளது.
நாகர்கோவில், புதுக்கடையை சேர்ந்தவர் சிரில்ராஜ். இவரது மகன் அஜீத். கடந்த 26ம் தேதி பள்ளிக்கூடத்துக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. அடிக்கடி, விளையாடக் கூடாது, படிக்க வேண்டும் என்று சிரில்ராஜ் கூறுவார். இதனால் அதிருப்தி அடைந்த அஜீத், வீட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் அஜீத் சென்னையில் தங்கியுள்ளதாக அங்கிருந்து ஒரு பாதிரியார் சிரில்ராஜுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து சிரில்ராஜ் குடும்பத்தினர் அங்கு சென்றனர். ஆனால் போனபோது, அஜீத் தனது பாதுகாப்பிலிருந்து தப்பி விட்டதாக பாதிரியார் கூறி விட்டார்.
இதனால் அஜீத்தின் குடும்பத்தினர் சோகமடைந்தனர். இந்த நிலையில், சிரில்ராஜின் மனைவி மல்லிகாவுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அஜீத் எங்களுடன்தான் இருக்கிறான், ரூ. 10 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்தி சிரில்ராஜுடன் பேசுமாறு அவர்களிடம் கூறிய மல்லிகா, கணவரின் நம்பரையும் கொடுத்தார். அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரன், சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு வங்கியைக் குறிப்பிட்டு அந்த வங்கியில் இந்தக் கணக்கில் பணத்தைப் போட்டு விடுமாறு கூறி கணக்கு எண்ணையும் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்த சிரில்ராஜ் தனு மகனை மீட்டுத் தருமாறு கோரி புகார் கொடுத்தார். லத்திகா சரணின் உத்தரவுப்படி விசாரணை முடுக்கி விடப்பட்டது.
சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று போலீஸார் விசாரித்தபோது கடத்தல்காரன் கொடுத்த கணக்கு எண் அந்த வங்கியின் ஊழியர் சீனிவாசன் என்பவரின் கணக்கு எண் என்று தெரிய வந்தது.
சீனிவாசனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, சில மர்ம நபர்கள் வங்கிக்கு என்னிடம் வந்து புதியதாக கணக்கு ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டார்கள். முறையான ஆவணங்கள் இல்லாமல் முடியாது என்றேன். அதற்கு அவர்கள் வெளிநாட்டில் இருந்து ரூ.10 லட்சம் பணம் வரும் என்று சொல்லி என்னுடைய கணக்கு நம்பரை கேட்டார்கள், அதனால் கொடுத்தேன். மற்றபடி எனக்கும் அவர்களைத் தெரியாது என்றார்.
இந்த நிலையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிரில்ராஜைத் தொடர்பு கொண்டு மதுரையில் இருக்கிறான், கோவையில் இருக்கிறான், பெங்களூரில் இருக்கிறான் என்று அலைக்கழித்துள்ளனர்.
கடைசியாக பெங்களூரில் இருப்பதாக கடத்தல்காரர்கள் கூறியதால் போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
இந்த துணிகர கடத்தல் குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்துவிட்டது. சிறுவனை கடத்தியவர்களை இன்னும் ஓரிரு நாளில் பிடித்து விடுவோம் என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications