பாக். மசூதியில் ராணுவ வேட்டை 100 பேர் பலி-மதகுரு சாவு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் நேற்று அதிகாலை தொடங்கிய ராணுவ தாக்குதலின் இறுதியில், தலிபான் ஆதரவு புரட்சி மதகுரு அப்துல் ரஷீத் காஸி கொல்லப்பட்டார். 100க்கும் மேற்பட்டோரும் இந்த சண்டையில் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்தின் மையப் பகுதியில் லால் மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்திற்குள் மதரஸாவும் உள்ளது. இந்த மசூதியை நடத்தி வருபவரான அப்துல் ரஷீத் காஸி, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர். தனது மதரஸாவில் தலிபான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்து வந்தார்.

மேலும் மதரஸாவில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்களை தலிபான் தீவிரவாதிகளாகவும் மாற்றி வந்தார். இந்த செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு அதிபர் முஷாரப் உத்தரவிட்டார்.

Abdul Rasheed

ஆனால், காஸி அதை நிராகரித்து விட்டார். மேலும் அரசின் நடவடிக்கையைத் தடுப்பதற்காக ஏராளமான பெண்கள், குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார்.

இதையடுத்து மசூதியை ராணுவம் முற்றுகையிட்டது. கடந்த 2ம் தேதி நடந்த ராணுவ முற்றுகை நேற்று அதிகாலை தாக்குதலாக மாறியது. ஆபரேஷன் சைலன்ஸ் என்ற பெயரில் நேற்று அதிகாலை, ராணுவம், மசூதிக்குள் அதிரடியாக புகுந்தது.

புகுந்த சில மணி நேரங்களில் ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மொத்தம் 88 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 ராணுவ கமாண்டோக்களும் இந்த சண்டையில் உயிரிழந்தனர்.

தாக்குதலில் அப்துல் ரஷீத் காஸியும் கொல்லப்பட்டார். ராணுவத் தாக்குதலின் இறுதியில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசும் காஸியின் சாவை உறுதிப்படுத்தியது.

பதுங்கு குழியில் பதுங்கியிருந்தபோது அவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். சரண் அடைய அவர் மறுத்ததால் சுட்டுக் கொல்ல நேரிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் இக்பார் சீமா கூறினார்.

முதலில் காஸியை ராணுவ வீரர்கள் காலில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் சரணடைய மறுத்ததால் சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் வஹீத் அர்ஷாத் கூறுகையில், பரந்து விரிந்து கிடக்கும் மசூதியில் உள்ள ஒவ்வொரு அறையாக ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஒரு தீவிரவாதியைக் கூட விட்டு வைக்கக் கூடாது என்று அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஸிக்கு முதலில் எச்சரிக்கை தரப்பட்டது, சரணடைய கெடு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பணிய மறுத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஸியின் சகோதரியும், பெண்கள் மதரஸாவின் நிர்வாகியுமான உம்மே இ ஹசன், அவரது மகள் அஸ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்ப் பலியை குறைப்பதற்காக மிகவும் நிதானமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால்தான் நீண்ட நேரம் தாக்குதல் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

தீவிரவாதிகளைப் பிடிக்க விஷ வாயு செலுத்தப்படவில்லை. அந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை என்றார்.

கொல்லப்பட்ட காஸியின் அண்ணனும், லால் மசூதியின் தலைவருமான மெளலானா அப்துல் அஜீஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ராணுவ நடவடிக்கையின் மூலம் கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் நிலவி வந்த பெரும் பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+