நகராட்சித் தலைவர் கொலை- மேலும் ஒரு திமுக கவுன்சிலர் கைது
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில் மேலும் ஒரு திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் சமீபத்தில் சிவகங்கையில் கார் குண்டுக்குப் பலியானார். இதுதொடர்பாக திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் வெடிகுண்டைத் தயாரித்து வெடிக்கச் செய்த என்ஜீனியர் பாலா ஆகியோர் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை காவலில் எடுத்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தாங்கள்தான் முருகனைக் கொலை செய்தது என்று இருவரும் ஒப்புக் கொண்டனர். தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் முருகன் கொலை வழக்கில் 26வது வார்டு திமுக கவுன்சிலர் மணிமுத்துவுக்கும் தொடர்பு இருப்பது இருவரின் வாக்குமூலங்களின்படி தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று மாலை மணிமுத்துவை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரைக் கைது செய்தனர். உடனடியாக நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.