கோவை குண்டுவெடிப்பு வழக்கு: ஆக-1ல் தேதி தீர்ப்பு
கோவை:58 உயிர்களைப் பலி வாங்கிய கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவையில் கலவரம் வெடித்தது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கோவையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன.
காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவையை உலுக்கிய இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் தஸ்தகீர் என்பவர் விசாரணைக் காலத்தின்போது இறந்து விட்டார். மற்றவர்கள் மீது கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டெய்லர் ராஜா உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
167 பேர் மீதும் 17 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை நகல்கள் அனைவரிடமும் வழங்கப்பட்டது.
2002ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி விசாரணை தொடங்கியது. 2006ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து வக்கீல்களின் வாதம் 2006ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி தொடங்கியது. 155 நாட்களுக்கு இது நடந்தது.
இதையடுத்து அனைத்து விசாரணையும் கடந்த ஏப்ரல் 10ம் தேதியுடன் முடிவைடந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட 108 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதற்கு முன்பாக வருகிற 20ம் தேதி நீதிமன்றம் மீண்டும் கூடும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
தீர்ப்பு ஒரே நாளில் வழங்கப்படுவதற்குப் பதில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு போல பல கட்டமாக அறிவிக்கப்படுவற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் கோவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications