காந்தப் படுக்கை: ரூ. 350 கோடி மோசடி!- ஆந்திர வாலிபர் கைது
சென்னை:
போலியான காந்தப் படுக்கை, மெத்தைகளை விற்று தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிராவில் ரூ. 350 கோடி அளவுக்கு மோசடி செய்த வாலிபரை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் இன்று வளைத்துப் பிடித்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் ராஜ் வசந்த் பண்டிட் (26). இவர் காந்தப் படுக்கை என்ற பெயரில் போலியான காந்தப் படுக்கை, மெத்தை உள்ளிட்டவற்றை தயாரித்து விற்று வந்துள்ளார்.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் முறை மூலம் இந்த போலி காந்தப் படுக்கைகளை ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்றுள்ளார். இந்த வகையில் ரூ. 350 கோடி அளவுக்கு பணத்தையும் வாரிச் சுருட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜ் வசந்த் பண்டிட் மீது ஆந்திர மாநிலம் நல்கொண்டாவில் மட்டும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஹைதராபாத், மும்பை மற்றும் தமிழகத்திலும் இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதையடுத்து தலைமறைவாகி விட்டார் பண்டிட். இந்தியாவிலிருந்து தப்பி துபாய் போய் விட்டார். அவர் இந்தியா திரும்பினால் பிடிப்பதற்கு ஆந்திர போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை துபாயிலிருந்து சென்னைக்குத் திரும்பினார் பண்டிட். எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த அவரை விமான நிலையத்திலேயே போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பண்டிட் சிக்கியது குறித்து ஆந்திர போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து நல்கொண்டா சிஐடி இன்ஸ்பெக்டர் ரவீந்திர ரெட்டி தலைமையில் போலீஸ் படை சென்னைக்கு வந்தது. விமான நிலையத்தில் வைத்து பண்டிட்டை ஆந்திர போலீஸாரிடம் சென்னை போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் அவர் ஆந்திரா கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications