மீண்டும் அண்ணாவுக்குத் திரும்புவாரா கலாம்?
டெல்லி:
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அண்ணா பல்கலைக்கழதத்தில் பேராசிரியர் பணியில் அப்துல் கலாம் சேரவுள்ளார்.
மக்கள் ஜனாதிபதி என்ற பெருமையுடன் வருகிற 24ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் அப்துல் கலாம். தனது பதவிக்காலத்தின்போது எந்தவித சர்ச்சையிலும், அவப் பெயரிலும், களங்கத்திலும் சிக்காமல், மிகச் சிறந்த குடியரசுத் தலைவராகவும், ஆறிலிருந்து 60 வயது வரையிலான அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த கண்ணியமிகு முதல் குடிமகனாகவும் தனது பதவிக்காலத்தை முடிக்கிறார் கலாம்.
![]() |
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் போகிறேன் என்று முன்பே கூறி விட்டார் கலாம். இடையில், சிலர் அவரை மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த முயற்சித்தபோதும் அதை அன்புடன் மறுத்து விட்டார் கலாம்.
அப்துல் கலாம் தஙகளது நிறுவனத்தில் வந்து பணியாற்ற வேண்டும் என்று நாட்டில் உள்ள பல புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கலாமுக்கு வேண்டுகோள் விடுத்தன.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பழம்பெரும் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வருமாறு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் கலாம் எந்தப் பதிலையும் தராமல் இருந்தார்.
இந்த நிலையில், முன்பு தான் வேலை பார்த்த சென்னை அண்ணா பல்கலைக்கழத்திற்கே அப்துல் கலாம் திரும்புவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2001-2002ம் ஆண்டு அண்ணா பல்கலைகழகத்தில் ஏரோநாட்டிகல் மற்றும் விண்வெளி பொறியியல் துறையில் பேராசிரியராக பணி புரிந்தவர் கலாம். எனவே, மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்று அப்துல் கலாமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.
அவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் இறுதி முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என்றார் விஸ்வநாதன்.













Click it and Unblock the Notifications