ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்:பலர் காயம்-சுனாமி எச்சரிக்கை
டோக்கியோ: வட மேற்கு ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 190 பேர் காயமடைந்தனர். பல வீடுகள் தரைமட்டமாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பானின் வடமேற்கில் உள்ள நிகாடா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி என்ற இடத்திற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. ஏராளமானோர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளனர். அதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.
![]() |
இங்குள்ள கோவில்களின் கூரைகளும் இடிந்து விழுந்தன. நிகாடா மாகாணத்தில் உள்ள ஒரு அணு மின்சக்தி நிலையத்தில் தீப்பொறி ஏற்பட்டு சிறு தீவிபத்தும் ஏற்பட்டது. இருப்பினும் அணுக் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக புல்லட் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் ஜப்பானுக்கு மட்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் இது திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்தையடுத்து ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ஷின்ஷோ அபே தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு டோக்கியோ விரைந்துள்ளார்.
நிலநடுக்க பாதிப்புகளை மேற்பார்வையிடுவதற்காக டோக்கியோவில் அவசர கால மையம் திறக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ஜப்பானில் விடுமுறை தினம் என்பதால் இன்று பங்குச் சந்தை உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் கேஸ் கசிவு பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இதே நிகாடா மாகாணத்தில்தான் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு 65 பேர் உயிரிழந்தனர், 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1995ம் ஆண்டு கோபே நகரில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு அதில் 6400 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.













Click it and Unblock the Notifications