ஜப்பான் பூகம்பத்தால் அணு உலை சேதம்:கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கசிவு
டோக்கியோ:ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அங்குள்ள அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கலந்துள்ளது.
ஆனால், இந்த கதிர்வீச்சின் அளவை டோக்கியோ மின் சக்திக் கழகம் குறைத்துக் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜப்பானின் கஸிவஸாகி-கரிவா பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 1100 பேர் படுகாயமடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
![]() |
இந்த பூகம்பத்தால், கஸிவஸாகி பகுதியில் உள்ள உலகின் மிகப் பெரும் அணு மின் நிலையத்தில் சிறிய அளவில் தீ விபத்தும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அணு உலையில் இருந்த கதிர்வீச்சு கலந்திருந்த 1,200 லிட்டர் தண்ணீர் கடலில் கலந்தது.
கடலில் போய்ச் சேர்ந்த இந்த அணுக் கசிவு, தேசிய பாதுகாப்பு அளவுக்கும் கீழ்தான் உள்ளதாகவும், எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது.
ஆனால் அணு கசிவின் அளவை டோக்கியோ மின் சக்திக் கழகம் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும், கதிர்வீச்சின் அளவு அந்த நிறுவனம் கூறியதை விட அதிகம் உள்ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அணு மின் நிலையத்தை மூடி விட கரிவா நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
![]() |
அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சரியாகும் வரை அணு மின் நிலையத்தைத் திறக்க வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பூகம்பத்தைத் தொடர்ந்து அணு மின் நிலையத்தில் 50 வகையான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக டோக்யோ மின் சக்திக் கழக தலைவர் ஷூன்ஹிஸா கட்ஸுமடா கூறியுள்ளார். இருப்பினும் இவை அனைத்தும் அணுக் கசிவு சம்பந்தப்பட்டதல்ல என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்துத அவர் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். பூகம்பத்தின் அளவு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்து விட்டது.
இதனால்தான் தவிர்க்க இயலாத சில பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இருப்பினும் எந்தவித அச்சத்திற்கும் இப்போது அவசியம் இல்லை என்றார்.
பூகம்பத்தைத் தொடர்ந்து அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. அவற்றிலிருந்து தற்போது கசிவு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கோ, உயிர்களுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீத நிலவுகிறது. ஹோஷி முரோபூசி என்பவர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 2 முறை அணுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இப்போது 3வது முறையாக நடந்துள்ளது. இப்படியே போனால் இன்னொரு செர்னோபில் சம்பவம் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்றார்.
டோக்யோ மின் சக்திக் கழகம் சுதாரிப்புடன் செயல்பட்டு, அணுக் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயும் டோக்யோ மின் கழகத்தை கண்டித்துள்ளார்.
ஆனால் மூத்த அமைச்சரவைச் செயலாளர் யாஷிபா ஷியோஷாகி, இந்த அணுக் கசிவு பெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியதல்ல. பத்திரிக்கைகள்தான் இதை ஊதிப் பெரிதாக்கி விட்டன என்று கூறியுள்ளார்.
எப்படியோ, அணுக் கசிவு காரணமாக கரிவா பகுதியில் தொடர்ந்து மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில், பூகம்பத்தால் வீடுகளை இழந்த 9000க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக விடிய விடிய தூங்காமல் விழித்தபடி தங்களது முகாமில் தங்கியிருந்தனர்.
பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் அடியோடு ரத்தாகியுள்ளது. குடிநீரும் சரிவர கிடைக்கவில்லை. பெரும் பூகம்பத்தைத் தொடர்ந்து சிற்சில நில அதிர்வுகள் தொடர்ந்தபடி உள்ளன.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. உதவிப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.














Click it and Unblock the Notifications