கும்பகோணம் தீ விபத்தில் இறந்தகுழந்தைகளுக்கு ரூ. 60 லட்சத்தில் நினைவிடம்
கும்பகோணம்:கும்பகோணத்தில் கடந்த 2004ல் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக தமிழக அரசு நினைவிடம் அமைக்கிறது.
கடந்த 2004 ஜூலை 16ம் தேதி ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக தமிழக அரசின் சார்பில் நினைவு மண்டபம் அமைக்க பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குழந்தைகள் இறந்த பள்ளி வளாகத்திலேயே நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் குழந்தைகள் நினைவகத்தை பாலக்கரை பகுதியில் காவிரி நதிக் கரையில் 14,000 சதுர அடியில் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் இந்த நினைவிடம் அமையவுள்ளது.
இந்த நினைவிடத்தில் தியான மண்டபம், குழந்தைகள் பூங்கா, கம்ப்யூட்டர் மையம், வீடியோ மற்றும் ஆடியோ நூலகம், மீட்டிங் ஹால் மற்றும் பொது நூலகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
மேலும் இறந்த குழந்தைகளின் நினைவாக சிலையும் வைக்கப்படவுள்ளது. இதை வடிவமைக்கும் பொறுப்பு தமிழக அரசின் கலை மற்றும் சிற்பக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரியின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், நினைவுச் சிலை எட்டு பக்கங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. உயர்ந்த நிலையில் உள்ள தாமிரத்தை கொண்டு தயார் செய்யப்படும். 9 அடி உயரத்தில், சுமார் 2.5 டன் எடையில் இது உருவாக்கப்படும்.
இதற்கான மாடலை கல்லூரியின் 3 விரிவுரையாளர்கள் களிமண்ணில் வடிவமைத்துள்ளனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் இந்த மாதிரி சின்னத்தை நகராட்சி அதிகாரிகள், தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் பார்வையிடுவர். அவர்களின் யோசனைகளையும் கேட்டபின் சிலை தயாரிக்கும் பணி ஆரம்பமாகும்.
4 மாதங்களில் இந்த நினைவுச் சிலை தயாராகிவிடும் என்றார் பாலசுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications