எம்.பி.பி.எஸ்: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை:தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி:ஏற்கனவே தொழிற் படிப்புகளில் சேர்ந்துள்ளவர்கள், இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்த குழப்பத்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட குறிப்பேட்டில், பி.டி.எஸ். உள்ளிட்ட பிற தொழிற் படிப்புகளைப் படித்து வருவோர் இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாது என்று கூறியிருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இதை நீக்கி விட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு பிற தொழிற் படிப்புகளைப் படித்தவர்களும் இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு தொழிற் படிப்பு படித்தவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து சுமார் 400 மாணவ, மாணவியர்கள் கவுன்சிலிங் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இரு தரப்பு வக்கீல்களும் தங்களது கருத்தை எடுத்து வைத்தனர். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிக்க முடியாத ஒரு மாணவன் அதை இந்த ஆண்டு படிக்க முயன்றால் அதை எப்படி அரசால் தடுக்க முடியும்?.
அரசுக் கல்லூரியில் படிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதை எப்படி அரசு மறுக்க முடியும்?. அரசுக் கல்லூரிகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் கட்டணத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. இந்த நிலையில் அரசுக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களை அரசு எப்படித் தடுக்கலாம்? என்று கோபமாக கேட்டார்.
பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கடந்த ஆண்டு வேறு படிப்புகளில் சேர்ந்து படித்த மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் உத்தரவிட்டனர்.
அதேசமயம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கடந்த ஆண்டு மாணவர்களும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications