மகளிர் குலத்துக்குக் கிடைத்த வெற்றி: கருணாநிதி
சென்னை:பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது மகளிர் குலத்துக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
![]() |
அப்போது செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இது மகத்தான வெற்றி, மகளிர் குலத்துக்குக் கிடைத்த வெற்றி. பதவியேற்பில் கலந்து கொள்ள 24ம் தேதி டெல்லி போகிறேன் என்றார் கருணாநிதி.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:
கேள்வி: அதிமுகவிலிருந்து நான்கு பேர் அணி மாறி வாக்களித்திருப்பது குறித்து
கருணாநிதி: அந்தக் கட்சியின் தலைவிதான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி: கட்சித் தலைமையின் முடிவு பிடிக்காமல்தான் இவ்வாறு வாக்களித்துள்ளார்களா?
கருணாநிதி: எனக்குத் தெரியாது.
கேள்வி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக நிலைப்பாடு என்ன?
கருணாநிதி: அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஹமீத் அன்சாரியை ஆதரிப்பதுதான் எங்களது நிலைப்பாடு.
கேள்வி: சில வாக்குச் சீட்டுக்களில் ஜெய் ஸ்ரீராம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்களே?
கருணாநிதி: அவ்வளவு பெரிய சேது சமுத்திரத் திட்டத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று பேசுகிறவர்கள் வாக்குச் சீட்டில் ராமர் பெயரை எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என்றார் கருணாநிதி.
முன்னதாக பிரதீபா பாட்டீலின் வெற்றிக்குத் துணை நின்றதற்காக முதல்வர் கருணாநிதியை, தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்பு கொண்டு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications