கேரளாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்போலீஸ் - டிடிஆர்கள் உடந்தை!
திருநெல்வேலி: தமிழகத்திலிருந்து ரயில்வே போலீஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உதவியுடன் கேரளாவுக்கு அரிசி கடத்தப்படவிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் லாரிகள் மூலம் பெருமளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க அரசுத் தரப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் இல்லாததால் கடத்தல் ஜே ஜே என நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-ந் தேதி காலை நெல்லையிலிருந்து புனலூர் நோக்கி ரயில் கிளம்பியது. இந்த ரயில் தென்காசி ரயில் நிலையத்தை அடைந்த போது டிக்கெட் பரிசோதகர் செல்லத்துரை அதிக லக்கேஜ் வைத்திருந்த பயணிகளிடம் அபராதம் வசூலித்து கொண்டிருந்தார்.
அப்போது, ரயிலில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டன. அதைப் பார்த்த ரயிலவே போலீஸ்காரர் லாரன்ஸ் ஆப்ரகாம் ரயிலில் அரிசி மூடை ஏற்றுவதை கண்டித்துள்ளார். ஆனால் அதை நிராகரித்த செல்லத்துரை, அரிசி மூட்டைகளை ஏற்றுவதைத் தடுக்கக் கூடாது என லாரன்ஸிடம் வாக்குவாதம் செய்தார்.
இது குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதில் செல்லத்துரையை ஆப்ரகாம் தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் பரவியதும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடிய ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுகிறதாம். இந்தக் கடத்தலில் சில ரயில்வே காவலர்களுக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் தொடர்பு உள்ளது.
குறிப்பாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே காவலர்களும், டி.டி.ஆர்.களும் இந்தக் கடத்தலுக்கு முழு ஆதரவுடன் உள்ளதால் அவர்களை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications