இலங்கையை எட்டும் இந்திய செல்போன் நிறுவனங்களின் சிக்னல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களின் கோபுரங்களின் சிக்னல் இலங்கை வரை எட்டுகிறதாம்.
இதனால் பிஎஸ்என்எல் உள்பட இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி இலங்கையில் பல பகுதிகளில் பேச முடிகிறதாம்.
கடந்த 1978ம் ஆண்டு ராமேஸ்வரம் நம்புநாயகி கோவில் அருகே 80 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டது. இதே போல் இலங்கையின் தலைமன்னாரிலும் ஒரு கோபுரம் அமைக்கப்பட்டது. இவற்றின் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது.
1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனப் பிரச்சனை தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. 1988ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்ற போது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின.
ஆனால் அமைதிப் படை இந்தியாவுக்குத் திரும்பியவுடன் இவை மீண்டும் தடைபட்டன. இந்த நிலையில், 2003ம் ஆண்டு அப்போதைய பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் பிரதீப் பால்சிங் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் செய்தார்.
அதன் அடிப்படையில், தலைமன்னாரில் மேலும் ஒரு கோபுரம் அமைக்கப்பட்டது. அதேபோல் ராமேஸ்வரத்திலும் 100 மீட்டர் உயரத்தில் பிஎஸ்என்எல் சார்பில் புதிதாக ஒரு கோபுரம் அமைக்கப்பட்டு மீண்டும் இலங்கையுடன் தொலைபேசி இணைப்பு துவக்கப்பட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து தனியார் செல்போன் நிறுவனங்களும் டவர் அமைத்தன.
ஆனால், இந்த சேவையை விடுதலைப் புலிகளும் பயன்படுத்துகின்றனர் என்பதால் செல்போன் டவர்களின் சக்தியை குறைக்குமாறு பிஎஸ்என்எல் உட்பட அனைத்து நிறுனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த சக்தி குறைந்த டவர்களினால் உள்ளூரிலேயே தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்று துறைமுகத்தில் அமைந்திருக்கும் செல்போன் டவரின் சக்தியை அதிகரித்தது. அதே போல் மற்ற தனியார் செல்போன் நிறுவனங்களும் தங்களது டவரின் திறனை அதிகரித்துள்ளன.
இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 18 கி.மீ. வரை செல்போன் சேவை துல்லியமாக கிடைக்கிறதாம்.
இது மீனவர்களுக்கும் பெரும் உதவியாக உள்ளதாம்.
இலங்கையின் தலைமன்னார், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளிலும் இந்திய செல்போன் நிறுவனங்களின் சேவை எட்டுகிறதாம்.
இதைப் பயன்படுத்தி கடத்தல் கும்பல்கள் இந்திய கடற்படை, கடலோர காவல் படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு படையினரிடம் இருந்து எளிதாக தப்பி விடுவதாக கடற்படை கூறுகிறது.












Click it and Unblock the Notifications