குற்றாலத்தில் அடிதடி: போலீஸாரை தாக்கிய4 வழக்கறிஞர்கள் கைது- ஸ்டிரைக்!
செங்கோட்டை:குற்றாலத்திற்கு குளிக்க வந்த தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள், அங்கு மசாஜ் கடைக்காரரிடம் ரகளை செய்தனர். இதைத் தட்டிக் கேட்ட போலீஸாரை துரத்தித் துரத்தி அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 40 பேர் பல்வேறு வாகனங்களில் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். நேற்று இரவு அவர்களில் 6 பேர் போதையில் பழைய குற்றால அருவியில் குளிக்க சென்றுள்ளனர்.
அங்கு ஆயில் மசாஜ் கடை வைத்துள்ள மாடசாமி என்பவரிடம் மசாஜ் செய்துள்ளனர். ஆனால், சரியாக மசாஜ் செய்யவில்லை என்று கூறி அவரை வழக்கறிஞர்கள் தாக்கினர்.
இதையடுத்து குளிக்கச் சென்ற வழக்கறிஞர்கள் அங்கு ஏற்கனவே குளித்துக் கொணடிருந்த மணிமுத்தாறு சிறப்பு காவல் படை பட்டாலியனைச் சேர்ந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொது மக்களிடமும் தகராறு செய்துள்ளனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பழைய குற்றாலத்திலுள்ள போலீஸ் அவுட்போஸ்டிலிருந்து பாதுகாப்புக்கு இருந்த திருவேங்கடம், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் ராஜன், ஜெயராம் ஆகியோர் வந்து தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை தடுத்தனர்.
ஆனால் வழக்கறிஞர்கள், போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். மேலும், சிலர் குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகளிடம், குறிப்பாக பெண்களிடம் வம்பு செய்ய ஆரம்பித்தனர். இதைத் தட்டிக் கேட்ட போலீஸாரையும்,பொது மக்களையும் வழக்கறிஞர்கள் அடிக்க ஆரம்பித்தனர்.
போலீஸாரை சூழ்ந்து கொண்டு அடித்தனர். அவர்களிடமிருந்து போலீஸார் தப்பி ஓடினர். அவுட் போஸ்ட்டுக்குள் போய் அவர்கள் தஞ்சம் புகுந்தபோது, அவுட் போஸ்ட் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போன வழக்கறிஞர்கள் சரமாரியாக அடித்தனர்.
பெரும் கலவர சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தென்காசி டி.எஸ்.பிக்குத் தகவல் போனது. கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து போலீஸாரையும், பொது மக்களையும் தாக்கிய வழக்கறிஞர்களைப் பிடிக்க முயன்றனர். அதில் இக்னேஷியஸ், வேல்சாமி, மார்க், பூங்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
வழக்கறிஞர்கள் தாக்குதலில் பல போலீஸாரும், மசாஜ் கடை உரிமையாளர் மாடசாமியும் காயமடைந்தனர்.
தப்பி ஓடிய வழக்கறிஞர்கள் மற்ற வக்கீல்களிடம் விவரத்தைச் சொல்லவே அனைவரும் திரண்டு காவல் நிலையம் சென்றனர். கைது செய்யப்பட்ட வக்கீல்களை விடுவிக்குமாறு போலீஸாரிடம் அவர்கள் வாதாடினர். ஆனால் போலீஸார் அதை ஏற்காமல் வழக்கறிஞர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர் என்கிறது போலீஸ் தரப்பு.
இந் நிலையில் பிடிபட்ட 4 வழக்கறிஞர்களையும் இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கு திரண்டு வந்த தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் 4 பேரையும் செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயக்குமாரிடம் போலீஸார் ஆஜர்படுத்தியபோது, போலீசார் தங்களைத் தாக்கியதாக கூறி உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டினர். இதையடுத்து நான்கு பேரையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
போலீஸ்-வழக்கறிஞர் மோதல் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே போலீசை கண்டித்து நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் குதித்துள்ளனர். இது குறித்து தென்காசி வழக்கறிஞர் சங்த தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், டி.எஸ்.பி மயில் வாகணன், இன்ஸ்பெக்டர் குப்புசாமி, எஸ்.ஐ ஆறுமுகச்சாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications