கர்நாடகத்திலிருந்து 40 வெளிநாட்டு இஸ்லாமிய மாணவர்கள் மாயம்!
பெங்களூர்:கர்நாடகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வந்த 40 வெளிநாட்டு முஸ்லீம் மாணவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். இவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக 2 இந்திய டாக்டர்கள் இங்கிலாந்திலும், ஒரு டாக்டர் ஆஸ்திரேலியாவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட டாக்டர் முகம்மது ஹனீப் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது. எனவே விரைவில் அவர் விடுவிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இந் நிலையில் கைதான 3 பேரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வழங்குமாறு கர்நாடக காவல்துறைக்கு மத்திய உளவுத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து பெங்களூர், மைசூர், பெல்காம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த தகவலை கர்நாடக போலீஸ் சேகரிக்க ஆரம்பித்தனர்.
இந்த கணக்கெடுப்பும் விவரம் சேகரிக்கும் பணியும் தொடங்கியதில் இருந்து 40 வெளிநாட்டு மாணவர்க் கல்லூரிகளை விட்டு மாயமாகியுள்ளனர். அவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.
அவர்கள் எங்கு போனார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இப்போது நிச்சயம் கர்நாடகத்தில் இல்லை என்று காவல்துறை உறுதியாகத் தெரிவித்துள்ளது.
மாயமான 40 பேரும் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications